டிராபிக் போலீஸ் மீது கொலைவெறி தாக்குதல்: தலைமறைவான அதிமுக ஆவின் சேர்மனுக்கு வலை!
திருச்சி: திருச்சியில் ஜீயபுரம் கடைவீதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவலரை தாக்கிய அதிமுக நிர்வாகியும் ஆவின் கூட்டுறவு சங்க தலைவருமான அகிலை பழனியாண்டியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வாகன சோதனையின் போது மதுபோதையில் காவலர் ஆத்மநாதனை அகிலை பழனியாண்டி தாக்கியுள்ளார். ஆத்மநாதன் அளித்துள்ள புகாரின் பேரில் அதிமுக நிர்வாகி மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகில் உள்ள திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சதீஷ்குமார், வெள்ளிக்கிழமையன்று தனது காரில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே வந்த போது பதிவு எண் இல்லாத கார் ஒன்று சதீஷ்குமார் காரை முந்தி செல்ல முயன்றது. சதீஷ்குமார் அந்த காரை முந்தியபோது லேசாக உரசியதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனை அந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்த காவலர் ஆத்மநாதன் பார்த்துள்ளார். இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துள்ளார். அப்போது கடைவீதியில் நின்றுகொண்டிருந்த ஆவின் சேர்மன் அயிலை பழனியாண்டி, தனது மருமகனின் நண்பரான சதீஷ்குமாரை போலீஸ் அழைத்துப்போவதைப் பார்த்து விசாரித்துள்ளார். இருவரும் தகராறு செய்ததால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துப்போவதாக ஆத்மநாதன் கூறவே, மது போதையில் இருந்த அயிலை பழனியாண்டி ஆத்மநாதனை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் காவலர் ஆத்மநாதன் மயங்கி விழுந்துவிட்டார். இதனையடுத்து ஆத்மநாதனை, அங்கிருந்தவர்கள் தூக்கிக்கொண்டு வந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய ஆத்மநாதன், நடந்த சம்பவத்தை அப்படியே விவரித்தார். " என் சொந்தகாரனையே ஸ்டேஷனுக்கு கூப்புடுறீயா இன்னைக்கு உன்னை என்ன பண்றேன் பாரு என்று என்று குடிபோதையில் என் சட்டை கிழித்தும் என்று இரண்டு கைகளை மடக்கிபிடித்து இடுப்பிலே குத்தியும் என்னை அப்படியே கீழே விழ வைத்து சரமாரியாக தாக்கினார். இதை பொதுமக்கள் எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டுயிருந்தனர். நான் அப்படியே மயங்கி கீழே விழுந்துவிட்டேன். கண்விழித்த போது மருத்துமனையில் இருக்கிறேன். இப்போ என்னால் எழுந்து நிற்க முடியவில்லை, இடுப்பும் முதுகும் சேர்ந்து வலிக்கிறது என்று கூறினார்.
இதுகுறித்து ஜீயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆவின் தலைவர் அயிலை பழனியாண்டி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசில் புகார் அளிக்கப்பட்ட தகவல் அறிந்த உடன் அயிலை பழனியாண்டி தலைமறைவாகிவிட்டார். தலைமறைவான அதிமுக நிர்வாகி அயிலை பழனியாண்டிக்கு ஜியபுரம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தலைமறைவான பழனியாண்டி அந்தல்லூர் பகுதி ஒன்றிய அவைத்தலைவராகவும் இருக்கிறார். உளவுத்துறை போலீசார் அரசுமருத்துமனைக்கே வந்து விசாரித்து நடந்த சம்பவம் உண்மை என்று அறிந்த பின்னரே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளும்கட்சி நிர்வாகி ஒருவர் போக்குவரத்து காவலர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் காவல்துறை மத்தியிலும் ஆளும் கட்சியினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.