அந்த ஒற்றை வார்த்தையால் அதிமுக கூட்டத்தில் நிர்மலா பெரியசாமி- வளர்மதி கடும் மோதல்!
பன்னீர்செல்வம் குறித்து நிர்மலா பெரியசாமி புகழ்ந்து பேசினார். இது சசிகலா ஆதரவாளர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியதால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி பங்கேற்று பேசினார்.
சசிகலா தரப்புக்கு எதிராக திரும்பியுள்ள பன்னீர்செல்வம் குறித்து நிர்மலா பெரியசாமி புகழ்ந்து பேசினார். இது சசிகலா ஆதரவாளர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியதால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
நிர்மலா பெரியசாமி பேசுகையில், ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மக்கள் ஆதரவு இருப்பதால் அதிக ஓட்டுகளை பெறுவார்கள் என்றார்.
வளர்மதி எதிர்ப்பு
இவரது இந்த பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, எதிர்ப்பு தெரிவித்தார். பன்னீர்செல்வத்தை பற்றி இங்கு பேசக்கூடாது என்று அவர் தெரிவித்தார். ஆனால் நிர்மலா பெரியசாமி கேட்பதாக இல்லை. மக்கள் செல்வாக்கு உள்ளவரை பற்றி பேசுவதில் தவறில்லை என்று பதிலுக்கு கூறினார்.
வாக்குவாதம்
இதனால் கோபமடைந்த பா.வளர்மதி, நீங்கள் எல்லாம் ஒரு முடிவோடு தான் இருக்கிறீர்களா? அப்படியென்றால் ஏன் இங்கு வருகிறீர்கள்? என்று கோபமாக கேட்டார். நிர்மலா பெரியசாமி அதற்கும் பதில் கொடுத்தார். ஜெயலலிதா கட்சியும், இரட்டை இலை சின்னமும் இங்கு இருப்பதால் தான் வருகிறோம். உங்களிடம் பேசி பலனில்லை, யாரிடம் பேச வேண்டுமோ? அவரிடம் பேசிக்கொள்கிறோம் என ஆவேசமாக கூறிய நிர்மலா பெரியசாமி, கூட்டத்திலிருந்து வெளியேற முயன்றார்.
வெளிநடப்பு
ஆனாலும் விடவில்லை, பா.வளர்மதி. நிர்மலா பெரியசாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, ஒருவரை ஒருவர் பார்த்து ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்பிறகு நிர்மலா பெரியசாமி கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
எதிரி இல்லை
வெளிநடப்பு செய்த பிறகு நிர்மலா பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது: கட்சி ஒற்றுமைக்காக ஒரு கருத்தை சொன்னேன். பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் நமக்கு என்ன விரோதியா என கேட்டேன். அவர்களும் நம் கட்சியை சேர்ந்தவர்கள் தான் என்றேன்.
சின்னம் முக்கியம்
கட்சி சின்னம் பறிபோய் விடக்கூடாது என்ற ஆதங்கத்தில்தான் நான் இந்த கருத்தை கூறினேன். அதற்கு கூட்டத்தில் இருந்த சி.ஆர்.சரஸ்வதியும், குண்டு கல்யாணமும் என்னை மோசமாக திட்டினர். சி.ஆர்.சரஸ்வதி, என்னை கட்சியை விட்டு வெளியே போகுமாறு கூறினார். வளர்மதியும் என்னை திட்டினார்.
விளக்கம் கொடுக்க ரெடி
அவர்கள் பேசும் அளவுக்கு, நான் இறங்கி பேச நினைக்கவில்லை. எனவேதான் உடனடியாக கூட்டத்தில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இது சிறிய பிரச்சினைதான். ஜெயலலிதா தொடங்கிய கட்சியும், சின்னமும் எங்கு இருக்குமோ? அங்கு தான் நானும் இருப்பேன். இதுகுறித்து கட்சி தலைமை விளக்கம் கேட்டால் நிச்சயம் பதில் அளிப்பேன். இவ்வாறு நிர்மலா பெரியசாமி கூறினார். நட்சத்திர பேச்சாளர்களே பன்னீர்செல்வம் பற்றி புகழ ஆரம்பித்துள்ளது சசிகலா தரப்புக்கு ஷாக்கை கொடுத்துள்ளது.