தீபாவளிக்கு மக்களை வாழ்த்தாத "மக்களின் முதல்வர்" ஜெயலலிதா மற்றும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்
சென்னை: மக்களின் முதல்வர் என்று அதிமுகவினரால் அன்புடன் அழைக்கப்படும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தீபாவளியையொட்டி மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்கவில்லை.அதேபோல தமிழக முதல்வரான ஓ.பன்னீர் செல்வமும் வாழ்த்து தெரிவிக்கவில்லை.
தீபாவளி வாழ்த்துகளை இவர்கள் தெரிவி்க்காமல் போனதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
அதேசமயம், ஆளுநர் ரோசய்யா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். ஆனால் வழக்கம் போல திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவிக்கவில்லை.
முதல்வரின் வாழ்த்து மிஸ்ஸி்ங்
வழக்கமாக அனைத்து மத பண்டிகைகளுக்கும் தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவிப்பார். ஆளுநரும், முதல்வரும் தெரிவிக்கும் வாழ்த்துகள்தான் ஊடகங்களில் முதன்மையாக வெளியாகும். மற்ற தலைவர்களின் வாழ்த்தெல்லாம் இவர்களுக்குப் பிறகுதான். ஆனால் இம்முறை முதல்வரின் வாழ்த்து வரவில்லை.
வாழ்த்த மறந்த ஓ.பன்னீர் செல்வம்
ஆயுத பூஜைக்கு ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்திருந்தார். அப்போது ஜெயலலிதா சிறையில் இருந்தார். ஆனால் தீபாவளிக்கு ஜெயலலிதா வெளியில் வந்து விட்டார். ஆனால் பன்னீர் செல்வத்தின் வாழ்த்துதான் வரவில்லை.
ஏன் வாழ்த்தவில்லை
முதல்வர் பன்னீர் செல்வம் ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று தெரியவில்லை. இதற்கான காரணமும் அரசுத் தரப்பில் வெளியிடப்படவில்லை.
ஜெயலலிதாவும் வாழ்த்தவில்லை
அதேபோல அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. அவர் வழக்கமாக அனைத்து விதமான பண்டிகைகளுக்கும் தவறாமல்,அழகான வார்த்தைகளோடு கூடிய செய்தியை வெளியிடுவது வழக்கம்.
காரணம் என்னவோ
ஆனால் இந்த இருவருமே தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்காமல் விட்டு விட்டனர். இது மக்கள் மனதில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆனால் இதற்கான விடையை, விளக்கத்தை இவர்கள்தான் அளிக்க வேண்டும்.