பெரும்பான்மைக்கு என்ன செய்வது... முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அவசர ஆலோசனை
டிடிவி தினகரன் எம்எல்ஏக்கள் 19 பேர் கொடுத்துள்ள ஆதரவு வாபஸ் நெருக்கடியை சமாளிக்க முதல்வர் தலைமையில் அவசர ஆலோசனை நடந்தது.
சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கொடுத்துள்ள 'ஆதரவு வாபஸ்' நெருக்கடியை சமாளிப்பது குறித்தும், சட்டசபையில் தங்கள் ஆட்சிக்கு மெஜாரிட்டியை நிரூபிப்பது குறித்தும் தலைமைச் செயலகத்தில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள்.
தமிழக அரசியல் களம் பரபரப்புக் கட்டத்தில் இருக்கிறது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தினகரன் ஆதரவு எம் எல் ஏக்கள் 19 பேர் , முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்துள்ளனர்.
இது ஆளும் தரப்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பான்மை பலத்தை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட கோரி ஆளுநருக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
Recommended Video
இதுபோன்ற இரண்டுபக்க நெருக்கடியை சமாளிக்க என்ன செய்யலாம் என்றும், சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க என்ன செய்யவேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதல்வர் ஓ.பன்னீசெல்வமும், மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தலைமைச் செயலகத்தில் பரபரப்பு நிலவுகிறது. எந்த நேரத்திலும் பெரும்பான்மை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடலாம் என்பதால் அதிமுக வட்டாரம் அதிகபட்ச உஷ்ணத்தில் இருக்கிறது.