கூவத்தூரில் இருந்து சென்னை வந்தடைந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
கூவத்தூரில் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் சென்னை வந்தடைந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் இரவு 11 மணிக்கு மேல் அங்கிருந்து சென்னை திரும்பினார்.
தமிழகத்தின் 13-வது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி ஏற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைத்தார். தொடர்ந்து 4 குழுக்களாக 30 அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர்.
முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி பின்னர் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் எம்.எல்.ஏக்கள், கட்சி மூத்த நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூவத்தூர் சென்றனர். தொடர்ந்து முதல்வரும் கூவத்தூர் சென்றார்.
அங்கு எம்.எல்.ஏக்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். நாளை சட்டசபை சிறப்பு கூட்டத் தொடர் நடக்க உள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்களுடன் தீவிர ஆலோசனை நடத்திய பின்னர் அங்கிருந்து இரவு 11 மணியளவில் சென்னை புறப்பட்டு வந்தடைந்தார்.