முதல்வர் எடப்பாடி இன்று டெல்லி பயணம்..ராம்நாத் கோவிந்தை நேரில் சந்திக்கிறார்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அங்கு ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளார்.
அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் அணிகளின் அரசியல் நகர்வுகள் டெல்லியை மையமாகக்கொண்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மத்தியில் ஆளும் பாஜகவின் தலைமை அதிமுகவின் இரு அணிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் டெல்லி சென்று மோடியை சந்தித்து பேசினார்.
இதனிடையே பாஜக சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னர் ராம்நாத் கோவிந்திற்கு ஆதரவு அளிக்குமாறு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தமிழக முதல்வர்ர் எடப்பாடி பழனிச்சாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரிடம் தொலைபேசி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு கோரினார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின் வெளியே வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான என்.டி.ஏ. வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு அ.தி.மு.க. அம்மா அணி ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.
மேலும், மோடியின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார். எடப்பாடியின் முடிவுக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவிப்பார்களா? என்பது கேள்விக்குறியே. அதே நேரத்தில் பன்னீர்செல்வம் பக்கமும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 5 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார். அங்கு ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து பேச இருக்கிறார். இந்த சந்திப்பின் போது அதிமுக அம்மா அணியின் ஆதரவை ராம்நாத் கோவிந்திடம் தெரிவிக்க இருக்கிறார். வேட்புமனு தாக்கலிலும் எடப்பாடி கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.