மாணவர்கள் மோதல்: "ரூட்" தலைகளை அடக்குங்க.. கல்லூரி முதல்வர்; டிஸ்மிஸ் செய்க... ஜெ.
சென்னை: மோதலில் ஈடுபடும் மாணவர்களை கல்லூரிகளை விட்டு நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, கல்லூரி மாணவர்களின் ‘ரூட்டு தலை'; அவர்களுக்கான அரசியல் பின்புலம் இவற்றை கட்டுப்படுத்தாவிட்டால், மோதலை தடுக்க முடியாது,'' என, மாநில கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டுள்ள, முகமது இப்ராகிம் கூறியுள்ளார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் கடந்த 9-ஆம் தேதி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரண்டு மாணவர்கள் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின் போது, கல்லூரி முதல்வர் முகமது இப்ராஹிம், மாநகரப் போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பேருந்து படிக்கட்டுப் பயணத்தைத் தடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்தார்.
மாணவர்கள் மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக அப்பகுதியில் இருந்த போலீஸார் கல்லூரிக்குள் செல்ல முயன்றபோது, கல்லூரிப் பேராசிரியர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டதாகக் கூறப்பட்டது.
சம்பவத்தின் போது, கல்லூரியில் முதல்வர் இல்லாதது, கல்லூரிக்குள் போலீஸாரை அனுமதிக்காதது போன்ற காரணங்களே மாணவர்கள் மோதலைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதற்குக் காரணம் என போலீஸ் தரப்பில் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் பணியிட மாற்றம்
இந்த நிலையில், கல்லூரி முதல்வர் முகமது இப்ராஹிம் வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அத்துடன், நந்தனம் அரசு கல்லூரி முதல்வர், பிரேமானந்த பெருமாள் மாநில கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டார்.மாநில கல்லூரியின் முதல்வராக, 14 மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டவர் முகமது இப்ராகிம். சம்பவம் குறித்து முன்னரே அறிந்த போதும் தடுக்கவில்லை என்றும், போலீசாரை உள்ளே அனுமதிக்கவில்லை என்றும் காரணம் கூறி, இவர் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது கல்லூரிப் பேராசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரெய்டு நடத்த திட்டம்
கடந்த ஆண்டு இதேபோல மோதல் சம்பவம் நடந்தபோது போலீஸார் கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்து சோதனை நடத்தினர். இதில் மரங்களுக்கு இடையேயும், மண்ணுக்கு அடியிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கத்தி மற்றும் சில ஆயுதங்களை கைப்பற்றினர். மீண்டும் அதேபோல ஒரு சோதனை நடத்த போலீசார் அனுமதி கேட்டுள்ளனர்.
ஆலேசனை கூட்டம்
மாணவர்கள் மோதல் குறித்தும் பணியிட மாற்றம் குறித்தும் கருத்து கூறியுள்ள கல்லூரி முதல்வர் முகமது இப்ராஹிம், சம்பவம் நடந்த, 9ஆம் தேதி காலை, 11:00 மணிக்கு, சென்னை பல்லவன் இல்லத்தில், மாணவர்கள் விவகாரம் தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், கல்லூரி முதல்வர்கள், கல்லூரி கல்வி இயக்குனர், தமிழக உயர்கல்வித் துறை செயலர் ஆகியோருடன் நானும் இருந்தேன். கூட்டம் முடிந்து, 12:15 மணிக்கு வெளியில் வந்த போது தான், போலீஸ் உதவி கமிஷனர் பீர் முகமது தகவல் தெரிவித்தார்.
மாணவர்கள் கைது
உடனடியாக நான் கல்லூரிக்கு சென்றேன்.இதில், சம்பந்தப்பட்ட மாணவர்கள், ஏழு பேரும் யார் என்பதை, போலீசார் அடையாளம் கண்டு, அவர்களை கைது செய்தனர். மறுநாள், மற்றொரு தரப்பு மாணவர்கள் என்னை தாக்க வந்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.இந்த சம்பவம் குறித்து, தமிழக முதல்வருக்கு அளித்த தகவல் அடிப்படையில், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன். போலீசாரை உள்ளே அனுமதிக்காததுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
தகவல் தரவில்லை
கல்லூரியில் யாரும் போலீசை தடுக்கவில்லை என்பது குறித்து உயர்கல்வித் துறை செயலரிடம் விளக்கம் அளித்துள்ளேன். மேலும், போலீசார் இதுகுறித்து தகவல் அளித்துள்ளதாக கூறியிருப்பது தவறு.நான் தினசரி காலை, நுண்ணறிவு போலீஸ் பிரிவில், கல்லூரிக்காக நியமிக்கப்பட்டுள்ள போலீசாரை தொடர்பு கொண்டுதகவல் கேட்பேன். அதன்படி, நடவடிக்கை எடுக்கப்படும்.சம்பவம் நடந்த அன்று, அவர்கள் காலையில் எந்த தகவலும் அளிக்கவில்லை.
ஆயுதங்கள் பதுக்கிவைப்பு
கல்லூரியை பொறுத்தவரை, தமிழக முதல்வர் செல்லும் பாதை என்பதால், எப்போதுமே போலீசார் இருப்பது வழக்கம். சம்பவமானது, யாரும் எதிர்பாராமல், சில நிமிடங்களில் நடந்து, சம்பந்தப்பட்டவர்களும் தப்பிவிட்டனர்.கல்லூரி மாணவர்களும், தற்போது கூட்டமாக வந்து தாக்குதல் நடத்துவதில்லை. கல்லூரியின் சுற்றுச்சுவரில் பாதுகாப்பில்லாத பகுதியில், அவர்கள் நுழைந்து, ஆயுதங்களை பதுக்கி வைக்கின்றனர்.
போலீசார் தண்டிக்கவில்லை
கும்பலாக இல்லாமல், தனித்தனியாக ஆங்காங்கே நின்று கொண்டு, மொபைல்போன் மூலம் தகவல் பரப்பி, அசம்பாவிதங்களை நிகழ்த்துகின்றனர். மாணவர்களை கல்லூரி நிர்வாகம் தடுக்கவில்லை என கூறும் போலீசார், இதற்கு முன், கல்லூரி மாணவர் தேர்தல் நடந்த போது, வெற்றி பெற்ற மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே, பஸ்சின் மீதேறி ஆட்டம் போட்ட போது ஒன்றும் செய்யாமல், பாதுகாப்பு அளித்தது ஏன் என்பது தெரியவில்லை.போலீசார், மாணவர்களை தண்டிப்பதில்லை.
போலீஸ் கண்காணிப்பில்
சமீபத்தில், போலீஸ் தரப்பில், மாணவர் பிரச்னை குறித்த, ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தது. கும்பலாக, ஒரு பகுதியில் இருந்து பஸ்சில் புறப்படும் மாணவர்களை, அங்கேயே பிரித்து, பேருந்தில் ஏற்றி விட வேண்டும். பேருந்திலேயே அவர்களை கண்காணிக்க வேண்டும் என்று, அந்த கூட்டத்தில், ஆலோசனை கூறப்பட்டது. போலீசார் இதுவரை அதை பின்பற்றியதாக தெரியவில்லை.
அரசியல் பின்புலம்
'ரூட் தல' என, அழைக்கப்படும், மாணவர்கள் தான், இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது போன்ற விஷயங்களில், அரசியல் பின்புலம் அவர்களுக்கு உதவியாக உள்ளது. கல்லூரி தேர்தல் நடந்த போது, வெளியில் இருந்து வந்த ஒரு நபர், ' இந்த கல்லூரியை இழுத்து மூடிவிடுவேன்' என, என்னை மிரட்டிவிட்டுச் சென்றார்.
மது அருந்தும் மாணவர்கள்
முன்னாள் மாணவர்கள் சிலர், 'ரூட் தல'களுக்கு ஆதரவளிக்கின்றனர்.இந்த தரப்பு மாணவர்கள், படிப்பதற்காக மட்டுமே கல்லூரி வரும் மாணவர்களின் பையில், மது பாட்டில்களை வைத்து அனுப்புகின்றனர். கல்லூரியில் அவர்களை நாங்கள் கண்காணிப்பதில்லை என்பதால், உள்ளே வந்ததும், அந்த மாணவர்களிடம் இருந்து மது பாட்டில்களை வாங்கி, உள்ளேயே வைத்து அருந்தி விட்டு, இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.சமீபத்தில், கல்லூரியில் இருந்து கஞ்சாவும் கண்டெடுக்கப்பட்டது.
‘தலைகளை வெட்டினால்...
எனவே, முதலில், 'ரூட் தலை'களை கட்டுப்படுத்துதல்; அரசியல் பின்னணியை ஒடுக்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மட்டுமே, கல்லூரிக்கு உள்ளேயும், வெளியேயும், மாணவர்களின் அராஜகத்தை தடுக்க முடியும்.இல்லை என்றால், எந்த முதல்வர் வந்தாலும், எந்த காலத்திலும், இவர்களை கட்டுப்படுத்துவது கடினம்.
எந்த கல்லூரியிலும் சேர முடியாது...
தற்போது, போலீசில் சிக்கியுள்ள மாணவர்கள், இனி எந்த கல்வி நிறுவனத்திலும் சேர முடியாத அளவில், அவர்களது மாற்றுச் சான்றிதழில், தகவல் குறிப்பிடப்பட்டு, சென்னை பல்கலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்
ஜெயலலிதா உத்தரவு
கல்லூரி மாணவர்கள் மோதல் குறித்து நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், விசாரணையின் முடிவுகள் குறித்த விவரங்கள் அனைத்தும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு அரசு தரப்பில் இருந்து கல்லூரி முதல்வருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
ஒழுங்கு நடவடிக்கை
கல்லூரியின் பாதுகாப்புக்காக எந்த நடவடிக்கை எடுத்தாலும் அரசு ஆதரவாக இருக்கும். கல்லூரிக்கு தேவையான நிதியையும் வழங்க ஏற்பாடு செய்யப்படும். மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப்படுகிறது.
கடுமையான தண்டனை
குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது தயவு தாட்சண்யம் காட்ட வேண்டியதில்லை. கல்லூரிக்கு வருகை தரும் மாணவர்கள் பஸ்களில் குழுக்களாக வருவோரை கண்காணிக்க போலீசார் தனிப்படை அமைக்க வேண்டும்.
நிரந்தர டிஸ்மிஸ்
தற்போது நடந்த மோதலில் ஈடுபட்ட 15 மாணவர் களையும் நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அந்த மாணவர்கள் வேறு கல்லூரிகளில் சேர முடியாத வகையில் அவர்களின் சான்றுகளை சென்னைப்பல்கலைக் கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.