துக்ளக் ஆசிரியர் சோ. ராமசாமியை நேரில் சந்தித்தார் முதல்வர் ஜெயலலிதா
சென்னை: உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துக்ளக் ஆசிரியர் சோவை முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்தித்து நலம் குறித்து கேட்டறிந்தார்.
சோ என்று அனைவராலும் அழைக்கப்படும் சோ.ராமசாமிக்கு தற்போது 80 வயதாகிறது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சோ, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ள சோவிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, அவரது நண்பர் சோ. ராமசாமியை அவரது வீட்டில் நேரில் சந்தித்து பேசினார். இந்த நிலையில் சோவின் உடல்நிலை பாதிக்கப்படவே மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.