கோட்டை நாகாத்தம்மனை கும்பிட்ட ஜெயலலிதா
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் பணியை முடித்து திரும்பும்போது கோட்டை முன்புறம் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
முதல்வராக கடந்த 23ஆம்தேதி பதவி ஏற்ற ஜெயலலிதா, அதன்பின்னர், 24ஆம்தேதி தலைமை செயலகத்துக்கு வந்து தனது அலுவலக பணிகளை தொடங்கினார். சில திட்டங்களை தொடங்கி வைத்தும், சில திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டும் தனது பணியை தொடங்கினார்
இந்த நிலையில், அவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் தலைமை செயலகத்துக்கு வந்தார். அங்கு மின்சாரத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை உள்பட சில துறைகளுக்கான திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்பின்னர், தனது அலுவலக பணிகளை முடித்துவிட்டு புறப்பட்டார்.
பிற்பகல் 2:55 மணிக்கு, கோட்டையில் இருந்து புறப்பட்ட ஜெயலலிதாவின் கார், கோட்டை முன்புறம், உள்ள நாகாத்தம்மன் கோவில் அருகே நிறுத்தப்பட்டது. காரில் இருந்தபடி, ஜெயலலிதா நாகாத்தம்மனை வழிபட்டார்; அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, ஜெயலலிதாவிடம் ஆரத்தி கொடுக்கப்பட்டது; அவர் கண்களில் ஒத்திக் கொண்டதும், கார் புறப்பட்டது.
கோட்டூர்புரம் வரசித்தி விநாயகரைப் போல கோட்டை நாகாத்தம்மனும் முதல்வர் ஜெயலலிதாவின் இஷ்ட தெய்வ லிஸ்டில் இணைந்து விட்டார் என்று அதிமுகவினர் பேசிக்கொண்டனர்.