ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆவது எப்போது? #Jaylalithaa
சென்னை: உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா நலமாக இருக்கிறார் என்றும் அவர் பிற்பகலில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவித்த நிலையில், தொடர்ந்து அவர் மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் அஜீரணக்கோளாறு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.
ஜெயலலிதா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியானதையடுத்து அப்பகுதியில் மருத்துமனை முன்பு ஏராளமான கட்சி பிரமுகர்களும், தொண்டர்களும் குவிந்தனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியதை அடுத்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
விடிய விடிய தொண்டர்கள் சாலைகளில் காத்திருந்தனர். முன்னாள், இந்நாள் அமைச்சர்களும் வரிசையாக மருத்துவமனை வாசலுக்கு வந்தனர். இந்த நிலையில் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா தற்போது நலமாக உள்ளார். முதல்வரின் உடல்நிலை சீராக உள்ளதாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனை செய்திக்குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பிற்பகலில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவித்தன. ஆனால் இன்னும் வீடு திரும்பவில்லை தொடர்ந்து மருத்துவமனையிலே ஜெயலலிதா உள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் தொண்டர்கள் பலரும் கோவில்களில் முதல்வருக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். அதிகாலை முதலே கோவில்களில் தொண்டர்கள் வழிபாடு நடத்தினர். முதல்வர் நலமாக உள்ளதாக காலை 7மணியளவில் மீண்டும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டதை அடுத்து தொண்டர்கள் பலரும் நிம்மதியடைந்துள்ளனர்.