சபாநாயரை சந்திக்காத 18 எம்எல்ஏக்கள்... அடுத்தகட்டம் குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை
சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பதிலளிக்க காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
முதல்வர் மீது நம்பிக்கையில்லாததால் அவருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.
இதனிடையே, தமிழக தலைமை கொறடா ராஜேந்திரனின் கவனத்துக்கு கொண்டு வராமல் தன்னிச்சையாக 19 எம்எல்ஏக்களும் ஆளுநரை சந்தித்ததாக சபாநாயகரிடம் கொறடா புகார் அளித்தார். அதன்பேரில் கொறடாவின் புகாருக்கு உரிய பதிலளிக்குமாறு 19 எம்எல்ஏக்களும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஜம்ப் ஆன ஜக்கையன்
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தினகரன் ஆதரவாளராக இருந்த ஜக்கையன் எடப்பாடி அணிக்கு தாவினார். இதைத் தொடர்ந்து மீதமுள்ள 18 எம்எல்ஏக்கள் புதுவையிலிருந்து கர்நாடகாவின் கூர்க்கில் உள்ள விடுதியில் தற்போது தங்கியுள்ளனர்.
தினகரன் கோபம்
அதிமுக பொதுக் குழு கூட்டத்தால் வெகுண்ட தினகரன், ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் உள்ளடி வேலைகள் நடந்து வருவதாக தெரிவித்தார். அதனால் அந்த 18 பேரும் ராஜினாமா செய்தால் அரசு கவிழ்ந்துவிடும் நிலை ஏற்படலாம் என்று தெரிகிறது.
இன்றுடன் கெடு முடிவு
சபாநாயகரை தங்கதமிழ்ச் செல்வனும், வெற்றிவேலும் மட்டுமே சந்தித்துள்ளனர். மீதமுள்ள எம்எல்ஏக்கள் யாரும் சந்திக்கவில்லை. இந்நிலையில் சபாநாயகரின் நோட்டீஸுக்கு பதிலளிக்கும் காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ளது. எனினும் 18 எம்எல்ஏக்களும் நேரில் சென்னைக்கு வரவில்லை.
முதல்வர் ஆலோசனை
இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து அமைச்சர்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இதேபோல் சபாநாயகருடன் சட்ட அமைச்சர் சண்முகமும், தலைமை கொறடா ராஜேந்திரனும் ஆலோசனை நடத்தினர். இதனால் அந்த 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்படுவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.