தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையை காண்பீர்கள்- ஓபிஎஸ்: ஏதாவது பிளான் இருக்குமோ?
டெல்லி: டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள் என்றார். இதன்மூலம் அவர் தடையை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிடுவாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்று சந்தித்தார். அப்போது ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு வழக்கு நிலுவையில் உள்ளதால் தற்போது உதவ இயலாது என தெரிவித்தார். அதேநேரத்தில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுனையாக இருக்கும் என்றும் மோடி கூறினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள் என்றார். முதல்வரின் இந்த பதில் தமிழக மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் வந்தப்பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிடுவாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு எந்த மாதிரி நடவடிக்கையை எடுக்கப்பபோகிறது என்ற எதிர்ப்பும் அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் ஒரு சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோல் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தனி சட்டம் கொண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.