அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்பது குறித்து ஓபிஎஸ் ஆலோசனை
அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஜெயலலிதாவிற்குப் பின்னர் வி.கே. சசிகலாவிடம் அதிமுக தலைமை பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலாவிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்பட 5 பேர் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்திற்கு சசிகலா வந்து முறைப்படி பொறுப்பை ஏற்பார் என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.