தஞ்சாவூர்: அரசு பொருட்காட்சியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படம்- குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி
தஞ்சாவூர்: தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள பன்னீர்செல்வம் படம், தஞ்சாவூரில் துவங்கிய அரசு பொருட்காட்சி அரங்குகளில் வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், மாநகராட்சி மைதானத்தில் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய, அரசு பொருட்காட்சியை, கடந்த 17ம் தேதி, கலெக்டர் சுப்பையன் துவக்கி வைத்தார்.
அரசுத்துறை அரங்குகள்
இதில், வருவாய், போலீஸ், வேளாண், பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, மக்கள் நல்வாழ்வு, கால்நடை பராமரிப்பு உட்பட அனைத்து துறையினர் சார்பில், அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த துறைகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளில், தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் படம் இடம்பெற்றுள்ளது
பதவி இழந்த ஜெயலலிதா
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா தானாகவே பதவி இழந்துவிட்டார். இதைத் தொடர்ந்து தமிழக முதல்வரானார் ஓ.பன்னீர்செல்வம். ஆனாலும், அரசு அலுவலகங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படங்களே இன்று வரை இருக்கின்றன.
முதல்வர் அறைக்கே போகாத ஓ.பி.எஸ்
இன்னும் சொல்லப்போனால், ஜெயலலிதா இருந்த முதல்வர் அறைக்குகூட தற்போதைய முதல்வர் ஓ.பி.எஸ். செல்லாமல் தனது பழைய அறையிலேயே இருந்து வருகிறார்.
ஜெ.படத்தை அகற்ற வலியுறுத்தல்
இதனிடையே, அரசு அலுவலகங்களில் உள்ள ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
முதல்வர் படத்துடன்
இந்நிலையில், முதன் முறையாக அரசு பொருட்காட்சியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படம் இடம் பெற்றுள்ளது. உச்ச நீதிமன்றத்தில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட, 17ம் தேதி மாலை, தஞ்சையில் அரசு பொருட்காட்சி துவங்கியது. இதற்கான அரங்குகள் அமைக்கப்பட்ட போது, முதல்வர் பன்னீர்செல்வம் படம் வைக்க வேண்டும் என, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஜெ.படமும் உண்டு
அதேசமயம் தமிழகத்தின் 2013-14க்கான சிறந்த நகராட்சிக்கான விருதை கும்பகோணம் நகராட்சிக்கு முதல் பரிசு மற்றும் விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட்டது" என்ற விளம்பரத்துடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படமும் வைக்கப்பட்டுள்ளது.