மக்களே திறந்த போரூர் மேம்பாலத்தை மீண்டும் திறந்தார் முதல்வர்.. எம்ஜிஆர் பாலம் என பெயரும் சூட்டல்
மக்களே திறந்து வைத்த போரூர் மேம்பாலத்தை இன்று முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார். அந்தப் பாலத்திற்கு எம்ஜிஆர் பாலம் என்று அவர் பெயர் சூட்டியுள்ளார்.
சென்னை: மக்களே திறந்த சென்னை போரூர் மேம்பாலத்தை முதல்வர் பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். ரூ. 54 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்துக்கு எம்ஜிஆர் பாலம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சென்னை பூவிருந்தவல்லி, மவுண்ட் சாலை, குன்றத்தூர் சாலை, ஆற்காடு சாலை ஆகியவற்றை இணைக்கும் முக்கிய சந்திப்பாக விளங்கும் போரூர் ரவுண்டானா அருகே மேம்பாலம் கட்டப்பட்டது.
2010ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட இந்த மேம்பாலப் பணி, அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் நிறுத்தப்பட்டது. போக்குவரத்து நெரிசலைத் தாங்க முடியாமல் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் வைத்த முக்கிய கோரிக்கையின் அடிப்படையில் 2015ல் அதிமுக ஆட்சிக் காலத்தில் மீண்டும் மேம்பாலப் பணிகள் தொடங்கியது.
பணி முடியாமல்..
இதனைத் தொடர்ந்து நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட போரூர் மேம்பாலக் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தன. போரூர் மேம்பாலப் பணிகள் முடிந்த போதும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படாமல் மூடியே வைக்கப்பட்டிருந்தது.
மக்களே திறந்து சாதனை..
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் சென்னை சுற்றுவட்டாரத்தில் மழை பெய்தது. அப்போது போரூர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கடுப்பான வாகன ஓட்டிகள் தாங்களாகவே மேம்பாலத்தை திறந்து பயன்படுத்தினார்கள்.
மீண்டும் மூடப்பட்ட பாலம்
சுமார் அரை மணி நேரமாக இந்த மேம்பாலத்தில் வாகனங்கள் சென்றன. இந்நிலையில் போலீசார் போக்குவரத்தை தடுத்து நிறுத்தியதோடு, தடுப்புகள் அமைத்து மேம்பாலப் பாதையை மீண்டும் மூடினர்.
மீண்டும் திறப்பு
இந்நிலையில், போரூர் ரவுண்டானா மேம்பாலத்தை முதல்வர் பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பச்சைக் கொடி அசைத்து போக்குவரத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிச்சாமி.
எம்ஜிஆர் பாலம்
திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தப் பாலத்திற்கு எம்ஜிஆர் பாலம் என்று முதல்வர் பழனிச்சாமி பெயர் சூட்டியுள்ளார். மக்கள் திறந்து பயன்படுத்திய பாலத்தை மீண்டும் முதல்வர் திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.