யாருக்கும் அஞ்சமாட்டேன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொன்னவர் ஜெயலலிதா.. எடப்பாடி பெருமிதம்
தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி தான் நடக்கிறது என்று முதல்வர் பழனிசாமி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
திருவாரூர் : தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி தான் நடக்கிறது என்றும், திருவாரூர் மாவட்டத்திற்கு ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஜனநாயக நாட்டில் பெண்கள் பெரும் பதவிக்கு வருவது அரிதான விஷயம். ஆசிய கண்டத்தை மட்டும் கணக்கில் எடுத்துப் பார்த்தால் இந்திரா காந்தி, பெனாசீர் பூட்டோ உள்ளிட்ட பெண் தலைவர்கள் உள்ளனர்.
ஆனால் எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் தனி ஒருவராக இருந்து ஜெயித்துக் காட்டியவர் ஜெயலலிதா. எத்தனை இன்னல்கள், துயரங்கள் வந்தாலும் யாருக்கும் அஞ்சமாட்டேன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொன்னவர் ஜெயலலிதா. ஜெயலலிதா திருவாரூர் மாவட்டத்திற்கு பல்வேறுதிட்டங்களை கொண்டு வந்தார்.
ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பது தமிழகத்தில் மட்டுமே. தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதா ஆட்சி தான் அதில் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் எள் முனை அளவும் சந்தேகம் வேண்டாம், என்று முதல்வர் பழனிசாமி உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பங்கேற்றார். இதே போன்று அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வேலுமணி, காமராஜ், செங்கோட்டையன், பாலகிருஷ்ண ரெட்டி, சபாநாயகர் தனபால் மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.