காமராஜர் சாலையில் டிராபிக்கோடு டிராபிக்காக போன ஓ.பிஎஸ்..!
சென்னை: காமராஜர் காலத்துக்குப் பின்னர் தமிழகம் கண்ட முதல்வர்களிலேயே மிகவும் எளிமையான முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என்பதற்கு காமராஜர் சாலையில் கண்ட இந்த காட்சியே சரியான உதாரணம்.
டிராபிக்கை நிறுத்தாமல், சைரனை ஒலிக்காமல், படு அமைதியாக, சாந்தமாக, மக்களோடு மக்களாக, டிராபிக்கோடு டிராபிக்காக போன முதல்வர் பன்னீர் செல்வத்தின் காரையும், அவரையும் மக்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்து வியந்தனர்.
ஒரு முதல்வர் போறது போலயே இல்லையே என்பதுதான் மக்களின் முக்கியமான ஆச்சரியம்.
ஜெயலலிதா புண்ணியத்தால்
ஜெயலலிதா புண்ணியத்தால் 2வது முறையாக முதல்வராகியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
ஆர்ப்பாட்டம் குறைவு.. அமைதி அதிகம்
முதல் முறை முதல்வராக இருந்தபோதே தனது ஆர்ப்பாட்டம் இல்லாத செயல்பாடுகள், அமைதி ஆகியவற்றத்தால் பலரையும் வசீகரித்தவர் பன்னீர் செல்வம்.
இப்போது எக்ஸ்ட்ரா அமைதி
ஆனால் 2வது முறையாக முதல்வராக இருக்கும் அவர் முன்பை விட அடக்கஒடுக்கமாக இருந்து வருகிறார். சுத்தமாக சத்தமே இல்லை. வெறும் காத்துதான் வருதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு அவரது பேச்சிலும் கூட மகா நிதானம், மகா அமைதி.
காமராஜர் சாலையில் கண்ட காட்சி
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை காமராஜர் சாலையில் காரில் வந்த காட்சியைப் பார்த்து அனைவரும் வியந்தனர்.
அமைதி..அமைதி.. அமைதி!
மகா அமைதியாக முதல்வரின் கார் வந்தது. கூட மாட குண்டக்க மண்டக்க வரும் பாதுகாப்புகார்களைக் காணவில்லை. முதல்வரின் காருடன் ஒரு சில கார்கள் மட்டுமே உடன் வந்தன.
சைலன்ட் மோடில் சைரன்
சைலன்ட் மோடில் சைரனை வைத்து விட்டனர். எனவே காரின் ஹார்ன் சத்தம் மட்டுமே கேட்டது.
"விஷ்...விஷ்.. சி்ம் வர்ராரு"!
முதல்வர் கார் செல்வதற்காக அத்தனை கார்களையும் போலீஸார் நிறுத்தவில்லை. மாறாக முதல்வர் கார் வந்தபோது அந்த நேரத்தில் மட்டும் மற்ற கார்களை ஒதுங்கிப் போகுமாறு லேசாக விசிலடித்து ஒழுங்குபடுத்தினர்.
இவரன்றோ மக்கள் முதல்வர்!
ஜெயலலிதாவை மக்களின் முதல்வர் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் மக்களோடு மக்களாக, மக்களின் கார்களோடு கார்களாக, டிராபிக்கோடு டிராபிக்காக போய் வந்து கொண்டிருக்கும் ஓ.பன்னீர் செல்வத்தைத்தான் மக்களின் முதல்வர் என்று சொல்ல வேண்டும்.. தாராளமாக சொல்லலாம்!
எப்படியோ, கேரளா மாதிரி தமிழ்நாடும் ஆகி வருவது சந்தோஷம்தான்!