மீண்டும் ஒரு பெருமழையைச் சந்திக்கத் தயாராகும் கடலோரத் தமிழக மக்கள்
சென்னை: தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நாளை முதல் 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளதால் மறுபடியும் ஒரு தொடர் மழையைச் சந்திக்கவும், சமாளிக்கவும் மனதளவில் மக்கள் தயாராகி விட்டனர்.
இதை விட இனி ஒரு பெரிய மழையை நாங்கள் சந்திக்கப் போவதில்லை. எப்படிப்பட்ட மழை வந்தாலும் இனி பயப்பட மாட்டோம் என்ற அளவுக்கு மனதளவில் நொந்து போய் விட்டனர் சென்னை மக்கள். அப்படி ஒரு பேய் மழை சமீபத்தில்தான் வந்து ஓய்ந்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு கன மழையை தமிழகம் எதிர்நோக்கியுள்ளது. நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அந்தமான் அருகே
தென் மேற்கு வங்க கடலில் இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலு இழந்துள்ளது. இந்த நிலைியல் கடந்த 2 நாட்களாக தெற்கு அந்தமான் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில்
இது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அடுத்த 48 மணி நேரத்தில் அ்தாவது 27ம் தேதி உருவாகும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.
அடுத்த 24 மணி நேரத்தில்
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஓரிரு இடங்களில் மழை இருக்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இருண்டு வரும் சென்னை
நாளை முதல் மழை பெய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட நேற்று இரவு முதலே சென்னையிலும் பிற பகுதிகளிலும் ஆங்காங்கே சிறு தூறல் காணப்படுகிறது.
கல்பாக்கத்தில் கன மழை
அதேசமயம், கிழக்குக் கடற்கரைச் சாலை, கல்பாக்கம், மாமல்லபுரம், திருப்போரூர், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.