'காபி வித் கலெக்டர்' தூத்துக்குடி ஆட்சியரின் துடிப்பான திட்டம்...மாணவர்கள் சந்திப்பில் உற்சாகம்!
நெல்லை மாவட்ட ஆட்சியரைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்கும் திட்டங்களைச் செய்லபடுத்துவதால் மாவட்ட மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துவருகின்றனர்.
தூத்துக்குடி: நெல்லை ஆட்சியரைத் தொடர்ந்து தற்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷூம் "காபி வித் கலெக்டர்" என்ற திட்டத்தின் மூலம் பொது மக்களை நெருங்கி வரத் தொடங்கியுள்ளார். முதல் சந்திப்பாக மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்லூரி , பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது திறமைகள், தன்னம்பிக்கை, புரிந்து கொள்ளுதல், பொது வாழ்வில் தங்களை எவ்வாறு ஈடுபடுத்தி கொள்ளுதல், தங்களது திறமைகளை வளர்த்து கொள்ளுதல் போன்ற வகையிலும் ஆட்சியர், உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் என்ற புதுமையான நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலக வாளகத்தில் நடந்தது.
இதற்கு ஆட்சியர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். மாணவ, மாணவிகளுக்கு தேவையான அறிவுரைகளையும், சந்தேகங்களையும் துணை ஆட்சியர் விளக்கினார்.
பின்னர் ஆட்சியர் வெங்கடேஷ் பேசுகையில், " நாட்டின் வளர்ச்சியில் மாணவ, மாணவிகளின் பங்கு முக்கியமானதாகும். குறிப்பாக உங்கள் பகுதியில் உள்ள அன்றாட பிரச்சனை, அடிப்படை தேவைகள் உள்ளிட்ட அனைத்தையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படு்கிறது.
பொதுவாக தங்களின் பகுதிக்கு என்ன என்ன தேவை என்பது மாணவ, மாணவிகளுக்கு தெரியும். அந்த தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பதும் உங்களுக்கு தெரியும். ஆனால் அதில் உள்ள சிரமங்கள், எந்தெந்த துறைகளுக்கு அது சம்பந்தப்பட்ட அலுவலர்களை எப்படி சந்திப்பது, அல்லது அது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கவனத்திற்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்து விளக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக நெல்லை ஆட்சியர், கால் யுவர் கலெக்டர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.