போலீஸ் துணை கமிஷனரின் கார் மோதி வங்கி பெண் ஊழியர் பலி!
கோவை: கோவையில் போலீஸ் துணை கமிஷனரின் கார் மோதி வங்கி பெண் ஊழியர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை அடுத்த குனியமுத்தூரை சேர்ந்தவர் பாஷா. இவரது மகள் ரகேனாபேகம். இவர் கோவை காமராஜர் ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை 9.15 மணி அளவில் ரகேனாபேகம் தனது ஸ்கூட்டரில் வேலைக்கு புறப்பட்டார். சுங்கம் கல்லறைத்தோட்டம் அருகேயுள்ள சாலையில் ஸ்கூட்டர் வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக வந்த கார் அவரை முந்திச்செல்ல முயன்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்கூட்டர் மீது கார் பயங்கரமாக மோதியது.
இதில் ரகேனாபேகம் தூக்கி வீசப்பட்டார். அவர் வந்த ஸ்கூட்டர் அருகில் உள்ள ஓடைக்குள் விழுந்தது. ரத்த வெள்ளத்தில் மிதந்த ரகேனாபேகம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ரகேனாபேகத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அந்த காரை ஓட்டி வந்தது யார், அந்த கார் யாருக்கு சொந்தமானது என்று விசாரித்தனர். விசாரணையில் அந்த கார் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ரம்யாபாரதிக்கு சொந்தமானது என்பதும், அந்த காரை ஓட்டி வந்தது போலீஸ்காரர் அசோக்குமார் என்பதும் தெரியவந்தது.
கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் துணை கமிஷனருக்கான குடியிருப்பு கட்டப்படுகிறது. அதை பார்ப்பதற்காக ரம்யாபாரதியின் தந்தை மற்றும் உறவினர்கள் காரில் வந்துள்ளனர். அப்போதுதான் இந்த விபத்து நடந்துள்ளது.
ரம்யா பாரதியின் தந்தை முன்னாள் கலெக்டர் ஆவார். விபத்து குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து விசாரித்தார்.
பின்னர் அவர் ரம்யாபாரதியின் காரை ஓட்டி வந்த போலீஸ்காரர் அசோக்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.