நீதி நிலைத்தது, தர்மம் வென்றது.. ஜெ. விடுதலையை போஸ்டர் அடித்து கொண்டாடும் தீயணைப்பு துறை
கோவை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையானதற்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் கோவையில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருந்தோம்பலுக்கு புகழ் பெற்ற கோவை நகர மக்களுக்கு இன்று வித்தியாசமான காட்சி ஒன்று கண்ணில்பட்டது. ஆம்.. சாலையோர சுவர்களில் ஜெயலலிதாவை வாழ்த்தி ஒட்டப்பட்ட போஸ்டர்தான் இந்த வித்தியாச காட்சிக்கு காரணம்.
தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கு போஸ்டர் அடிப்பதும், புகழ்பாடுவதும் வழக்கம்தானப்பா.. இதெல்லாம் ஒரு மேட்டரா என்று யாராவது நினைத்தால், கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள். இது அதுக்கும் மேல.
ஏனெனில், அந்த போஸ்டரை யாரோ அதிமுகவின் அடிமட்டத் தொண்டரோ, அம்மா விசுவாசியோ ஒட்டவில்லை. போஸ்டரை ஒட்டியதாக அந்த போஸ்டரிலேயே போடப்பட்ட பெயர்தான் இந்த அதிர்ச்சிக்கு காரணம். 'தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை, கோவை மாவட்டம்' என்று அச்சடித்தவர்கள் பெயர் அந்த போஸ்டரில் போடப்பட்டுள்ளது.
போஸ்டரில் ஜெயலலிதா இரட்டை விரலை காண்பிக்கும் போட்டோ, சிரித்தபடி உள்ள போட்டோ என இரட்டை போட்டோக்களும், வலது மூலையில், எம்ஜிஆரின் போட்டோவும் இருக்க, மேலே போட்ட வாசகம் "நீதி நிலைத்தது, தர்மம் வென்றது". அதற்கும் கீழே, 'மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மாண்புமிகு இதய தெய்வம், அம்மா' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேபோல, காவல்துறை, முத்திரைத்தாள் துறை, கலால்துறை, விவசாயத்துறை என ஒவ்வொரு அரசுத்துறை ஊழியர்களும் போஸ்டர் அடித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்கவே தலைசுற்றுகிறது அல்லவா?
அரசு ஊழியர் என்பவர் அரசுக்கான ஊழியராகும். பொதுமக்களுக்கான ஊழியராகும். அப்படியிருக்கும்போது இந்த போஸ்டர் எப்படி ஒட்டப்பட்டது என்பது புரியவில்லை. இந்த போஸ்டர் போட்டோ, சமூக வலைத்தளங்களில் மளமளவென பரவிவருகிறது.