தென் இந்தியாவில் புரட்சி.. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி 'கேம் பிளான்'.. நாசகார நக்சலைட்டுகள்!
கோவை: தென்இந்தியாவில் ஆயுத புரட்சி செய்ய வேண்டும் என்ற பயங்கர திட்டத்துடன் நக்சலைட்டுகள் காய் நகர்த்தி வருவதாக எச்சரிக்கிறது உளவுத்துறை.
கோவையில் நேற்றிரவு, 5 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூபேஷ் அவரது மனைவி ஷினா, அனுப், வீரமணி மற்றும் கண்ணன் ஆகியோர் கைதான நக்சலைட்டுகளாகும்.
நகர்ப்புறங்களிலும் நக்சலைட்டுகள் ஊடுருவல் தொடங்கியிருப்பதன் அறிகுறியாக இந்த கைது நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து உளவுத்துறை அதிகாரிகளிடம் காதுகொடுத்து கேட்டபோது கிடைத்த தகவல்கள் திடுக்கிட செய்பவையாக உள்ளன.
தென் இந்தியாவில் ஆதிக்கம்
உளவுத்துறை அதிகாரிகள் கூறிய தகவல்கள் இவைதான்:
2010ம் ஆண்டு கர்நாடகாவில் நந்தகுமார் என்ற நக்சலைட் கைது செய்யப்பட்டார். அவர்தான் முதன்முதலில், தென் இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்த திட்டமிட்டுள்ள தகவலை வெளிவிட்டார்.
வட மாநிலங்களில் பின்னடைவு
பிகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில், நக்சலைட் இயங்களுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டதை தொடர்ந்து, தென் இந்தியாவில், படை பலத்தை அதிகரிக்க நக்சலைட்டுகள் திட்டமிட்டுள்ளனர்.
முதல் எச்சரிக்கை
2014ம் ஆண்டு, டிசம்பரில் கேரளாவின் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி உள்ளிட்ட இரு இடங்களில் நக்சலைட்டுகள் லேசான தாக்குதலை நடத்தி மிரட்டினர். இந்த தாக்குதல்தான், நக்சலைட்டுகளின் முதல் எச்சரிக்கையாகும். தென்இந்தியாவில் தங்கள் ஆபரேசனை தொடங்கிவிட்டதாக நக்சலைட்டுகள் கொடுத்த சமிக்ஞை அது. இந்த திட்டத்திற்கு நக்சலைட்டுகள் வைத்துள்ள பெயர் 'ஆயுத புரட்சி'.
சீன ஆயுதங்கள்
நக்சலைட்டுகளுக்கு ஆயுதங்கள், சீனாவில் இருந்து வருகின்றன. இவற்றை பயன்படுத்தி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு வகையான திட்டங்களை வைத்துள்ளனர் நக்சலைட்டுகள்.
தமிழக ஆபரேசன்
தமிழகத்தில் நக்சலைட்டுகள் பிளான் என்பது, நகர்ப்புறங்களில் ஊடுருவுவது. மக்கள் தங்களது பிரச்சினைகளால் கோபமடைந்துள்ளதை பயன்படுத்தி நக்சலைட் ஆதரவாளர்களாக அவர்களை மாற்றுவது குறிக்கோளாகும். ஆயினும் இது முதல்கட்டமாகவே உள்ளது. இன்னும் முழுமையாக திட்டம் வெற்றியடையவில்லை. எனவே, வெளியில் இருந்து வந்திறங்கும் ஆயுதங்களை வாங்கும் இடமாக தமிழகத்தை நக்சலைட்டுகள் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். தமிழ் போராட்ட ஆதரவாளர்களை கைக்குள் போட்டுக்கொள்வதும் நக்சலைட்டுகளின் கேம் பிளானாக உள்ளது.
ஆந்திரா பிளான்
ஆந்திராவை பொறுத்தளவில் பயிற்சி எடுக்கும் இடமாக அம்மாநில வனப்பகுதிகளை நக்சலைட்டுகள் பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே ஆதிக்கம் செலுத்திய மாநிலம் ஆந்திரா என்பதால், அங்குள்ள பிளஸ் மற்றும் மைனஸ்கள் நக்சலைட்டுகளுக்கு நன்கு பரிட்சையமாகியுள்ளன.
கேரளா கேம்
கேரளாவில்தான் நக்சலைட்டுகள் தற்போது மிக ஆழமாக காலூன்றியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றது உளவுத்துறை. கோவையில் கைதான ரூபேஷ் சிபிஐஎம் கட்டசியின் மாணவர் பிரிவு நிர்வாகியாக இருந்தவர். அவரின் மனைவி ஷினா, கோர்ட்டில் கிளர்க் வேலை பார்த்தவர். எனவே, கேரளாவில் நக்சலைட்டுகள் முக்கிய இடங்களில் புகுந்துவிட்டது தெரியவந்துள்ளது. கேரளாவில், ரப்பர் தோட்ட தொழிலாளர்களை நக்சலைட்டுகள் வளைத்துபோட முயலுகின்றனர்.
கர்நாடக பங்கு
கர்நாடகாவை பொறுத்தளவில் பிற மாநில நக்சலைட்டுகளுக்கு உதவும் இடமாக மாற்றப்பட்டுக் கொண்டுள்ளது. இருப்பினும், கர்நாடக போலீசார் நக்சலைட்டுகளை ஒடுக்குவதில் தொடக்கத்திலேயே வெற்றி கண்டுள்ளதால், இங்கு வளர முடியாமல் நக்சலைட்டுகள் திணறிக்கொண்டுள்ளனர். கைதான வீரமணி கர்நாடகாவில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.