சிவனடியாருக்கு வந்த ஹெல்மெட் சோதனை.. தீர்க்க முடியாமல் தவித்த போலீஸ்.. காரணம் கொண்டை
கோவை: கோவையைச் சேர்ந்த சிவனடியார் ஒருவர், ஹெல்மெட்டைக் கையில் வைத்தும் கூட அதைப் போடாமல் போனதால் அவரைப் போலீஸார் பிடித்தனர். ஆனால் அந்த சிவனடியாரோ, முடிந்தால் நீங்களே ஹெல்மெட்டைப் போட்டு விடுங்க பார்ப்போம் என்று சவால் விட, ஹெல்மட்டை அவரது தலையில் மாட்ட முடியாமல் தவித்துப் போய் விட்டார்கள் போலீஸார்.. காரணம், சிவனடியாரின் தலையின் பின்னால் இருந்த பெரிய சைஸ் கொண்டை!
என்னடா இது சோதனை என்று நொந்து போன எப்படி இவர் மீது நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் விழித்து நிற்கிறார்கள். இந்த சிவனடியாரும் அசராமல் கையில் ஹெல்மெட்டை ஏந்தியபடி கோவையை வலம் வருகிறார்.
கோவையைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சிவனடியார். இவர் பெரிய சைஸ் கொண்டை வளர்த்துள்ளார். இதனால் இவரால் ஹெல்மெட் அணிய முடியவில்லை. இருப்பினும் சொந்தமாக ஹெல்மெட் வைத்துள்ள அவர் வாகனத்தில் அதை மாட்டிக் கொண்டு வலம் வருகிறார்.
இவரை தடுத்து நிறுத்தும் போலீஸாரிடம், சற்றும் பதட்டப்படாமல் ஹெல்மெட்டைத் தூக்கி கையில் கொடுத்து, நானா போட மாட்டேன் என்று சொல்கிறேன். முடிந்தால் நீங்களே மாட்டி விடுங்க என்று கூறுகிறார். அவர்களும் டிரை செய்து முடியாமல் தவித்து வருகின்றனர். காரணம், செந்தில்குமார் தனது தலையில் பின்னால் போட்டுள்ள பெரிய சைஸ் கொண்டைதான்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சிவனடியார்கள் முடியை அவிழ்க்க மாட்டோம். இது சிவன் வழிபாடு தொடர்புடையது. ஜடாமுடியுடன் கூடியவன் சிவன். அவனை வழிபடுவோரும் ஜடா முடி வளர்த்துத்தான் வழிபடுவோம். எனவே என்னால் ஹெல்மெட் போட முடியவில்லை. நான் மறுக்கவில்லை. ஆனால் எனது தலையில் ஹெல்மெட்டை பொருத்த முடியவில்லை.
என்னைப் போன்றவர்களுக்கு ஹெல்மெட் அணிவதிலிருந்து விதி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோருகிறேன் என்றார் செந்தில்குமார்.
படங்கள்: வாட்ஸ் ஆப்