டாஸ்மாக் கடையை மூட போராடிய சென்னை கல்லூரி மாணவர்கள் மீது போலீஸ் தடியடி.. பதற்றம்
சென்னை: அமைந்தகரையிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் கடை மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, போலீசார் நடத்திய தடியடியில் மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.
மதுவிலக்கு போராளி சசி பெருமாள் மரணத்தையடுத்து டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக தமிழகம் கொந்தளித்துள்ளது. கலிங்கப்பட்டியில் மதிமுகவினர் வைகோ தலைமையில் நேற்று நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது.
இந்நிலையில் சென்னை பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் அமைந்தகரையிலுள்ள டாஸ்மாக் மீது திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தினர். கற்களை கொண்டு வீசி டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கினர். இதனால் கடை ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர்.
அப்போது சம்பவ இடத்தில் ஒரு சில போலீசாரே இருந்ததால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மாணவர்கள் மீது தடியடி நடத்தி அங்கிருந்து கலைந்து ஓடச் செய்தனர்.
போலீசாரிடம் தனியாக சிக்கிய மாணவர்கள் கடுமையான தாக்குதலுக்கு உட்பட்டனர். பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக போராட வருகை தந்திருந்த புரட்சிகர மாணவர் இயக்கத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளையும் போலீசாரின் லத்திகள் பதம் பார்த்தன. இதனால் சில மாணவிகள் மயங்கி சாய்ந்தனர்.
இதையடுத்து உத்வேகம் கொண்ட மாணவ, மாணவிகள் 'டாஸ்மாக் ஒழிக, இளைஞர்களை சீரழிக்கும் டாஸ்மாக் ஒழிக' என்பது போன்ற கோஷங்களை எழுப்பினர். அந்த பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது
இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை கல்லூரி மாணவர்கள் மீது நடந்த தாக்குதலுக்காக தமிழகம் முழுவதிலுமுள்ள கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி சம்பவம் தமிழகம் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.