கறுப்பர்கள் பேச்சு.. புதுச்சேரி வந்த தருண் விஜய்க்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு.. வெளியேறுமாறு கோஷம்
தென்னிந்தியர்களை கருப்பர்கள் என்று பேட்டியொன்றில் கூறியதைக் கண்டித்து தருண்விஜய்க்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் தருண் விஜய்க்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க, பாஜக முன்னாள் எம்.பி தருண் விஜய், இன்று புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது அவருக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் கோஷமிட்டனர்.
தருண் விஜய் வெளியேறு, தருண் விஜய் ஒழிக என அவர்கள் ஆங்கிலத்தில் கோஷமிட்டனர். மாணவர்கள் கடைசி வரிசையில் கோஷமிட்டபோது, தருண் விஜய் முன் வரிசை நாற்காலியில்தான் அமர்ந்திருந்தார்.
கோஷமிட்ட மாணவர்களை வெளியேற்ற போலீசார் முற்பட்டனர். அப்போது, போலீசார்-மாணவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தென்னிந்தியர்களை கருப்பர்கள் என்று பேட்டியொன்றில் கூறியதைக் கண்டித்து தருண்விஜய்க்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.