புதுச்சேரியில் இன்று மருந்துக்கடைகளை மூடக் கூடாது: ஆட்சியர் கடும் எச்சரிக்கை
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று மருந்துக்கடைகளை மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் சத்யேந்திர சிங் துர்சாவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆன்லைன் வணிகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் நாளை மருந்துக்கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்று மருந்து வணிகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மருந்துப் பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கான சட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆன்லைன் மருந்து வணிகத்தால் நோயாளிகள், ஆன்லைனில் மருந்து வாங்கும் போது, போலி மருந்து மற்றும் காலாவதியான மருந்துகளை மாற்றி அனுப்ப, வாய்ப்பு அதிகம் என்று வணிகர்கள் கூறுகின்றனர்.
ஒரு சில பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் உதவும் வகையிலேயே ஆன்லைன் மருந்து வர்த்தகத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக மருந்து வணிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் அனைத்து மருந்து கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரியிலும் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மருந்துக்கடைகளை மூடக் கூடாது என ஆட்சியர் சத்யேந்திர சிங் துர்சாவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். மீறி மருந்துக் கடைகளை அடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.