இதுதான் விதி.. 2வது திருமணம் செய்து தப்பி ஓடி.. பேஸ்புக் மூலம் முதல் மனைவியிடம் சிக்கிய கணவர்!
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் முதல் மனைவியை ஏமாற்றி விட்டு ஓடி 2வது திருமணம் செய்து கொண்டார் ஒரு கல்லூரி உதவிப் பேராசிரியர். பின்னர் 2வது திருமணம் செய்தார். இந்த நிலையில் முதல் மனைவி்யுடன் போலியான பெயரில் பேஸ்புக் மூலமாக நட்பு கொண்டு தற்போது கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
பென்னாகரம் நெக்குந்தியை சேர்ந்த பாலச்சந்திரன் (31). தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணி புரிந்தார். 3 ஆண்டுக்கு முன், அதே பகுதியைச் சேர்ந்த அனு (27) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. பாலச்சந்திரன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டார். கணவர் திடீரென மாயமானதால் அதிர்ச்சி அடைந்த அனு அவரைத் தேடி வந்தார். எந்தத் தகவலும் கிடைக்காமல் கவலைக்குள்ளானார்.
இந்நிலையில், அனுவின் பேஸ்புக் முகவரிக்கு ஒரு புகைப்படம் வந்தது. அதில் பாலச்சந்திரன், வேறு ஒரு குழந்தையுடன் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து தனக்கு தெரியாமல் தன்னுடைய கணவன் 2வது திருமணம் செய்து கொண்டதாக, பென்னாகரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் பல உண்மைகள் வெளி வந்தன.
நடந்தது இதுதான்...!
பாலச்சந்திரன் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். பேஸ்புக்கில் வந்த புகைப்படத்தில் இருப்பது அவரது குழந்தைதான். பென்னாகரம் போலீசார், ஜெயங்கொண்டம் சென்று பாலச்சந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முதல் மனைவியை பிரிந்து சென்ற பாலச்சந்திரன், ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது தன்னுடன் வேலை செய்யும் பேராசிரியை சுபாஷினி (25) என்பவருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. அவரிடம் இன்னும் திருமணமாகவில்லை என கூறி ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்குத் தற்போது ஒரு வயதாகிறது.
அந்த குழந்தையுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத்தான் பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார். அதனால்தான் அனுவிடம் சிக்கிக் கொண்டார்.
நீயும் போலி.. நானும் போலி!
மனைவியைப் பிரிந்து சென்ற பாலச்சந்திரன் போலியான பெயரில் பேஸ்புக்கில் ஒரு கணக்கைத் தொடங்கினார். அதேபோல அனுவும் வேறு ஒரு பெயரில் பேஸ்புக்கில் இருந்தார். இருவரும் நட்பாகியுள்ளனர். பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நல்ல நட்புடன் பழகி வந்தனர். இந்த நிலையில் அனுவின் பேஸ்புக்குக்கு தனது 2வது மனைவிக்குப் பிறந்த குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அனுப்பி தானாகப் போய் சிக்கிக் கொண்டார் பாலச்சந்திரன்.