ஜல்லிக்கட்டுக்குக் குவியும் ஆதரவு.. இன்றும் மதுரை குலுங்கியது.. பேரணியாக படையெடுத்த மாணவர்கள்
ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்தியே தீர வேண்டும் என்ற முனைப்போடு இளைஞர்கள், மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்று மதுரையில் கல்லூரி மாணவர்கள் பேரணி நடத்தியுள்ளனர்.
மதுரை: ஜல்லிக்கட்டு ஆதரவாகவும், அதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் கல்லூரி மாணவர்கள் மதுரையில் பேரணியை நடத்தியுள்ளனர்.
பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இதுவரை ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. தமிழக அரசின் முதல்வரான ஓ. பன்னீர் செல்வம் நேற்றுதான் ஜல்லிக்கட்டு தொடர்பான கடிதத்தை பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார்.
மத்திய அரசு நமக்கென்ன என்று இருப்பதோடு, தமிழர்கள் பண்பாடு தொடர்பான அனைத்து நிகழ்வுகளிலும் தலையிட்டு வருகிறது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், விவசாயிகள் தற்கொலைகளைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இளைஞர்கள், மாணவர்கள் சாலையில் இறங்கி போராடி வருகின்றனர்.
மாணவர்கள் பேரணி
எந்தப் போராட்டத்திற்கும் மாணவர்களின் பங்கு இன்றியமையாதது. அந்த வகையில் இன்று மதுரையில் உள்ள கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து பெரிய அளவிலான பேரணியை ஜல்லிக்கட்டு ஆதரவாக நடத்தியுள்ளனர். மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் இருந்து சுப்பிரமணியபுரம் நோக்கி மாணவர்கள் பேரணியாக சென்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினார்கள்.
கோரிக்கை
2014ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது. அதில் இருந்து 2 ஆண்டுகளாக ஜல்லிக் கட்டு நடத்தப்பட வில்லை. அதனை நடத்த வேண்டும். குறிப்பாக பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக செய்ய வேண்டும்.
பொங்கல் விடுமுறை
பொங்கலுக்கு கட்டாய விடுமுறை இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கும் பேரணியில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மதுரை கல்லூரி மாணவர்கள் நடத்திய பேரணியில் விவசாயிகளின் தற்கொலையை தடுக்க மத்திய மாநில அரசுகள் தலையிட வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.
நூற்றுக்கணக்கில் பெண்கள்
கல்லூரிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் இன்னாள் மாணவர்கள் என்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணியில் எழுச்சியோடு கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பேனர்களை ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர். தன்னெழுச்சியாக மாணவ மாணவிகள் நடத்திய இந்தப் பேரணியால் மதுரை குலுங்கியது.
வகுப்பு புறக்கணிப்பு
இதே போன்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், இந்த பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.