"கோட்டா"ன்னா கேவலமா?... விஜய் ஆண்டனிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கொந்தளிப்பு
சென்னை: விஜய் ஆண்டனி நடித்து, இசையமைத்து உருவாகியுள்ள பிச்சைக்காரன் படத்தில் இடம் பெறும் பாடலில் இட ஒதுக்கீட்டை கடுமையாக விமர்சித்து இடம் பெற்றுள்ள பாடல் வரிக்கு சமூக வலைதளங்களில் மக்களிடையே கடும் எதிர்ப்பும், கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி உடனடியாக இந்தப் பாடலை நீக்க வேண்டும். இந்த வரியை நீக்க வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இட ஒதுக்கீடு என்றால் அவ்வளவு கேவலமாகப் போய் விட்டதா விஜய் ஆண்டனிக்கு என்றும் பலர் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக பேஸ்புக்கில் நமது கண்ணில் பட்ட சில கண்டனங்கள், கருத்துக்கள்.
மவுனம் என்பது கூரான ஜாதி வெறி
Umamaheshvaran Panneerselvam என்பவர் தனது பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து:
"கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்டராகுறான்..
தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்குறான் " என்று விஜய் ஆண்டனியின் புதிய படமான "பிச்சைக்காரன் " படத்தில் பாடல் வரி வருகிறது. கோட்டா என்றாலே கேவலம்..கோட்டா என்றால் அது அறிவற்றவர்கள் பெரிய பதவிகளில் அமர பயன்படுத்தும் யுக்தி என்ற அளவில் இங்கே சில அறிவுஜீவிகள் புலம்புவதை அப்படியே ஸ்க்ரீனில் காட்டுகிறார்கள். இப்படி இன்னும் எத்தனையோ விவகாரங்களை எனெக்கென்ன என்று மவுனமாகக் கடக்கிறோம். கீழ்வெண்மணி , உத்தப்புரம் , வாச்சாத்தி , மேலவளவு முருகேசன் , சேஷசமுத்திரம் தேர் , தருமபுரி இளவரசன் , திருகோவிலூர் இருளர்கள் தொடங்கி , ஆந்திர இளைஞன் ரோஹித் வேம்முள வரை சாதி, குத்தீட்டியைப்போல் காவு வாங்கிக்கொண்டே நீள்கிறது. மவுனம் என்பது கூரான ஜாதிவெறி .
"கோட்டா" மாணவனின் வேண்டுகோள்
Ezhil Arasan என்பவரின் கருத்து:
"கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்டராகுறான்.. தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்குறான்" என்கிற வரிகள் இடம்பெற்றிருக்கும் 'பிச்சைக்காரன்' படத்தின் பாடலை இப்போதுதான் youtubeல் கேட்டேன்! பலருக்கும் ஒரு விஷயம் இன்னும் புரிவதில்லை. எம்பிபிஎஸ் சீட்டை பெறுவதற்குதான் reservation. ஆனால், அதற்கு பிறகு அந்த மாணவன் படித்துதான் எம்பிபிஎஸ் தேர்வுகளில் தேர்ச்சிபெற வேண்டும். தேர்வுகளில் தேர்ச்சிபெற்று வெளியில் வரும் மாணவன்தான் மருத்துவராக கிளினிக் வைத்து நடத்த முடியும். ஏதோ reservationல் உள்ளே நுழைந்து, எம்பிபிஎஸ் தேர்வில் பெயிலாகிவிட்ட மாணவர்கள் எல்லாம் கிளினிக்குகள் நடத்திக்கொண்டு இருப்பதுபோல் 'சமூக அநீதியாளர்கள்' புளுகை பரப்புகிறார்கள். மீண்டும் தெளிவாகச் சொல்கிறேன். Admissionக்குதான் reservation. சீட் கிடைத்தபிறகு அந்த மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்து தேர்வுகளில் வெற்றிபெற்று, முழுத்தகுதியும் அடைந்தபிறகுதான் பட்டம் வாங்குகிறார்கள்! எல்லா படிப்பும் இப்படிதான்! பிச்சைக்காரன் படத்தின் இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் ஆகியோர் இந்த பாடல் வரிகளை நீக்க பரிசீலிக்க வேண்டும் என்பது இந்த 'கோட்டா மாணவனின்' வேண்டுகோள்!
கண்டனத்துக்குரிய கிளாமர் சாங்
பிரபா அழகர் என்பவரின் பதிவு: இயக்குனர் சசி இயக்கத்தில் அடுத்து வெளியாக இருக்கும் படம் "பிச்சைக்காரன்". இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி படத்தின் கதாநாயகன். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கிளாமர் சாங் (Glamour Song) என்ற ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த பாடலில் இடம் பெற்றிருக்கும் இரண்டு வரிகள் - "கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்டராகுறான்.. தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்குறான். இடஒதுக்கீடு என்னும் சமூகநீதிக்கான திட்டம் என்பது இந்திய அரசியலமைப்பு வழங்கியிருக்கும் உரிமை. இடஒதுக்கீட்டிற்கு எதிரான இந்த வரிகள் கடும் கண்டனத்திற்கு உரியவை.
ஜாதிய அயோக்கியவாதம்
இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பீடுகையில் தமிழகம் பொது சுகாதாரத்தில் சிறந்து விளங்குகிறதென்றால் அதற்கு முக்கியமான காரணங்களுள் ஒன்று இடஒதுக்கீடு என்னும் சமூகநீதி அடிப்படையில் அனைத்து சமூகத்தினரும் இங்கு மருத்துவர் ஆகக்கூடிய நிலை இருப்பதனால்தான். மேலும், தமிழ்நாடு அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் பிடிக்கும் மாணவர்களின் மதிப்பெண்களை ஒப்பிட்டு பார்த்தாலே ஒரு எளிய உண்மை புலப்படும். பொதுப்போட்டியில் இடம் பிடிக்கும் மாணவரின் மதிப்பெண்ணும் இடஒதுக்கீட்டீன் கீழ் இடம் பிடிக்கும் மாணவரின் மதிப்பெண்ணுக்கும் இடைவெளி மிகமிகக் குறைவு. கோட்டாவில் மருத்துவரானவருக்கு தகுதி திறமை குறைவு என்று சொல்வது வெறும் அறியாமையல்ல மிகப்பெரிய மோசடி மட்டுமல்ல ஜாதிய அயோக்கியவாதம்.
வருத்தம் தெரிவிக்க வேண்டும்
எழுத்தாளரும் தமுஎகச தலைவருமான ச.தமிழ்ச்செல்வனின் "வெயிலோடு போய்" என்ற சிறுகதையை, இயக்குனர் சசி, "பூ" என்ற நல்ல ஒரு திரைப்படமாக எடுத்தபோது பரவலாக பலருடைய பாராட்டுக்களையும் பெற்றார். அவருடைய திரைப்படங்கள் பெரும்பாலும் சமூகத்தீமைகளற்ற திரைப்படங்களாகவே இருந்துள்ளன. அப்படிப்பட்டவரின் படமொன்றில் இத்தகைய பாடல்வரிகள் இடம்பெறுவது அதிர்ச்சியாகவும் வருந்தத்தக்கதாகவும் உள்ளது. கவனக்குறைவாலோ அல்லது போதிய புரிதல் இல்லாததனாலோ ஏற்பட்ட தவறாகக்கூட இருக்கலாம். உடனே இந்த பாடல் வரிகளை நீக்குவதோடு, ஏற்பட்ட தவறுக்காக வருத்தம் தெரிவிக்கவேண்டும் இயக்குனர் சசி, இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி மற்றும் பாடலாசிரியர் லோகன்.