"டிராபிக்"கிடம் சிக்கித் தொடர்ந்து திணறும் கம்யூனிஸ்டுகள்!
சென்னை: கம்யூனிஸ்ட் கட்சிகள் சற்றே கவலைப்பட வேண்டும். கொஞ்சமாவது கவலைப்பட வேண்டும். தங்களது வாக்கு வங்கி இவ்வளவு வீக்காக இருக்கிறதே என்று கொஞ்சமாவது கவலைப்பட வேண்டும்.
பெரிய அரசியல் கட்சிகளிடம்தான் அவர்களால் தனித்து நின்று மோத முடியாது என்றால் டிராபிக் ராமசாமியிடம் கூட சிக்கித் திணறி வருகிறார்கள். இது கம்யூனிஸ்ட் கவலையுடன் பார்க்க வேண்டிய அம்சமாகும்.
டிராபிக் ராமசாமி போன்ற மக்கள் பிரச்சினைகளை முழுமையாக, உண்மையாக சட்ட ரீதியாக தீர்க்க முயல்வோருக்குத்தான் மக்கள் மத்தியில் கவனம் இருக்குமே ஒழிய வெறுமனே போராட்டங்களை நடத்தி வருவதன் மூலம் எந்த அளவுக்கு மக்களை ஈர்க்க முடியும் என்று தெரியவில்லை.
ஸ்ரீரங்கத்தில் முதல் அடி
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் நடந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை திணறடித்தார் முதல் முறையாக தேர்தலில் நின்ற டிராபிக் ராமசாமி.
தட்டுத் தடுமாறிய அண்ணாதுரை
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் சிபிஎம் போட்டியிட்டது. அண்ணாதுரை களம் கண்டார். அவருக்கு சிபிஐ ஆதரவு அளித்தது. இந்தத் தேர்தலில் அண்ணாதுரைக்கு 1552 ஓட்டுக்கள் கிடைத்தன.
கிட்ட வந்து முட்டிப் பார்த்த டிராபிக்
முதல் முறையாக களம் கண்ட டிராபிக் ராமசாமி இந்தத் தேர்தலில் வாங்கிய ஓட்டுக்கள் 1167 ஆகும். இது நிச்சயம் சாதனைதான்.
கிட்டத்தட்ட கின்னஸ் சாதனை
காரணம். பன்னெடுங்காலமாக தேர்தல் அரசியலில் ஈடுபட்டு வரும் ஒரு தேசியக் கட்சி வேட்பாளருக்கு மிக அருகில் வந்து ஒரு சாதாரண சுயேச்சை இத்தனை ஓட்டு வாங்கியது கின்னஸ் சாதனை போன்றது.
பாஜகவுக்கு கூட 5000 கிடைத்ததே
இந்தத் தேர்தலில் பாஜக கூட தனித்துப் போட்டியிட்டு 5015 ஓட்டுக்களை வாங்கியது. அந்த அளவுக்குக் கூட கம்யூனிஸ்டுகளால் வாக்கு வாங்க முடியாமல் போனது விசித்திரம்தான்.
நோட்டாவை விட
அதை விட கொடுமை, நோட்டா எனப்படும் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற தேர்வுக்கு 1919 பேர் வாக்களித்திருந்தனர். கம்யூனிஸ்ட் வேட்பாளரை விட நோட்டாவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்தன.
சிபிஐ பரவாயில்லை
இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும் சொற்ப வாக்குகளையே பெற்று டெபாசிட்டைப் பறி கொடுத்துள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இருப்பினும் ஸ்ரீரங்கத்துடன் ஒப்பிடுகையில் இங்கு பரவாயில்லை.
டிராபிக்கை முந்தினார்
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் டிராபிக் ராமசாமியை விட சிபிஎம் வேட்பாளர் மயிரிழையில் கூடுதல் வாக்குகள் வாங்கிய நிலையில் ஆர்.கே.நகரில் சிபிஐ வேட்பார் சி.மகேந்திரன் நல்ல வாக்குகளைப் பெற்றார். மகேந்திரன் பெற்ற வாக்குகள் 9710 ஆகும்.
நோட்டாவை வீழ்த்திய டிராபிக்
அதேசமயம், டிராபிக் ராமசாமியும் சும்மா இல்லை. ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் நோட்டா மற்றும் சிபிஎம் வேட்பாளரை விட குறைந்த வாக்குகளைப் பெற்ற அவர், இந்த முறை நோட்டாவை வென்றார். அதாவது டிராபிக் பெற்ற வாக்குகள் 4590 ஆகும். இது ஸ்ரீரங்கத்தை விட அதிக வாக்குகள் ஆகும்.
டிராபிக்கை விட வலுவானவர்களிடம் சிக்கினால்
மக்களுக்கான கட்சி என்ற பெயர் கம்யூனிஸ்ட்டுகளுக்கு உண்டு. மக்களுக்காக முதலில் தெருவில் இறங்கிப் போராடும் கட்சியும் கம்யூனிஸ்ட்தான். ஆனால் இப்படி ஆயிரம், 2000 என ஓட்டும் வாங்கும் அளவுக்கு வாக்கு வங்கியை படு மோசமாக வைத்திருந்தால் எப்படி.. கம்யூனிஸ்ட்கள் உத்தியை மாற்ற வேண்டிய நேரம் இது.
டிராபிக் ராமசாமி என்பதால் போய் விட்டது, இவரை விட வலுவானர்கள் தொகுதிக்கு ஒருவர் இறங்கினால் போதும், கம்யூனிஸ்ட்டுகளுக்கு பெரும் சிக்கல்தான்.