ரஜினியை விட கமல் தெளிவானவர்... விசிக ரவிக்குமார் தடாலடி!
ரஜினியின் டுவீட்டை பார்க்கும் போது கமல் தெளிவானவர் என எண்ணத் தோன்றுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : ரஜினிக்கு கமல் எவ்வளவோ தேவலாம் என்றும் ரஜினி டுவீட்டை படிக்கும் போது கமல் தெளிவானவர் என எண்ணத் தோன்றுவதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடனான சந்திப்பைத் தொடர்ந்து நேற்று ஆங்கில ஊடகங்களுக்கு நடிகர் கமல்ஹாசன் அளித்த சிறப்பு பேட்டி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலுக்கு வருவது உறுதி என்றும், தமிழக மக்கள் விரும்பினால் முதல்வராவேன் என்றும் கமல் கூறியது இன்றைய அரசியல் விவாதப் பொருளாகியிருக்கிறது. ரஜினி கமல் இருவரில் யாருடைய அரசியல் சிறப்பாக இருக்கும் என்று விமர்சகர்களும், வலைதள பதிவாளர்களும் தங்கள் பங்கிற்கு நியாயங்களை அடுக்கி வருகின்றனர்.
ரஜினி ட்வீட்
நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த விவாதமும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று காலையில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் அடுத்த கட்டமான தூய்மை சேவா திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறியிருந்தார்.
ஆதரவு டுவீட்
ரஜினி, கமல் இருவரும் தனிக்கட்சித் தொடங்குவார்களா, தேசிய கட்சிகளுடன் கைகோர்ப்பார்களா என்று பல கட்ட வியூகங்கள் வகுக்கப்பட்டு வரும் நிலையில் ரஜினி இன்று பிரதமர் மோடிக்கு ஆதரவாக தட்டிவிட்டுள்ள டுவீட் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.
I extend my full support to our hon. Prime Minister @narendramodi ji’s #SwachhataHiSeva mission. Cleanliness is godliness.
— Rajinikanth (@superstarrajini) September 22, 2017
பறக்கும் லைக்ஸ்கள்
நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த டுவீட்டிற்கு ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். மேலும் 2 மணி நேரத்தில் இந்த டுவீட் 12 ஆயிரம் லைக்குகளையும், 3 ஆயிரத்து 500 ரீடுவீட்டுகளை பெற்றுள்ளது.
தமிழிசை நன்றி
இதனிடையே ரஜினிகாந்த் போட்ட டுவீட்டுக்கு உடனடியாக நன்றி டுவீட்டை தட்டிவிட்டு ஸ்கோர் செய்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன். தூய்மையே சேவை என தாய்மை உள்ளத்தோடு வழி நடத்தும் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆதரவளித்தமைக்கு சகோதரர் ரஜினி அவர்களுக்கு நன்றி!!! என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தூய்மையே சேவை என தாய்மை உள்ளத்தோடு வழி நடத்தும் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆதரவளித்தமைக்கு சகோதரர் ரஜினி அவர்களுக்கு நன்றி!!! https://t.co/iOchD8ewfL
— Tamilisai Soundrajan (@drtamilisaibjp) September 22, 2017
ரவிக்குமார் கருத்து
இந்நிலையில் ரஜினியின் டுவீட் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பிரபல எழுத்தாளருமான ரவிக்குமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் ரஜினி படம் பார்ப்பவருக்கு கமல் படம் தேவலாம் எனத் தோன்றுவதைப் போல ரஜினி ட்வீட் செய்வதைப் படிக்கும்போது கமல் தெளிவானவர் என எண்ணத் தோன்றுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி படம் பார்ப்பவருக்கு கமல் படம் தேவலாம் எனத் தோன்றுவதைப்போல, ரஜினி ட்வீட் செய்வதைப் படிக்கும்போது கமல் தெளிவானவர் என எண்ணத் தோன்றுகிறது
— Ravikumar (@WriterRavikumar) September 22, 2017