சரியாக வேலை பார்க்காத அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு.. மத்திய அரசு அதிரடி!
சென்னை: சரியாக வேலை பார்க்காத, திறமையில்லாத அதிகாரிகள் பணியில் நீடிக்க முடியாது. அவர்களுக்கு கட்டாய ஓய்வளிக்கப்படும். இந்தத் திட்டம் மத்திய அரசின் அனைத்தத் துறைகளில் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
மத்தியில் மோடி அரசு பதவிக்கு வந்தது முதலே மத்திய அரசு அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் கிடுக்கிப்பிடி போட்டு வருகிறது மத்திய அரசு. இந்நிலையில் கட்டாய ஓய்வு என்ற சாட்டையைக் கையில் எடுத்துள்ளது மத்திய அரசு.
அந்தவகையில் தற்போது குறைந்த செயல் திறன் கொண்ட அதிகாரிகள் தங்களைத் திருத்திக் கொள்ளாவிட்டால் பணியை இழக்க நேரிடும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இதன் முதல்கட்டமாக மத்திய அரசின் வருவாய்த்துறையைச் சேர்ந்த 7 குரூப் ஏ பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் உள்பட 33 அதிகாரிகளுக்கு மத்திய அரசு, செயல்திறமையின்மையைக் காரணம் காட்டி கட்டாய ஓய்வை கொடுத்துள்ளது.
வருவாய்த்துறை என்றில்லாமல் அனைத்துத் துறைகளிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. மேலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 72 அதிகாரிகள் மீது ஒழுங்கீனம் தொடர்பான விசாரணையை நடத்தி அவர்களை டிஸ்மிஸ்ஸும் செய்துள்ளது மத்திய அரசு.
இதேபோல், அனைத்துத் துறைகளிலும் அதிகாரிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அவர்கள் சுதாரித்துக் கொண்டு சரிவர செயல்படாவிட்டால் கட்டாயம் நடவடிக்கைக்குள்ளாக நேரிடும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மேலும், பணியில் அலட்சியமாக இருப்பது, அசமந்தமாக வேலை செய்வது, கவனமின்மை, திறமையின்மை போன்றவை ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அரசு நிர்வாக சீர்மைக்கவும், சரியில்லாத அதிகாரிகளை நீக்கும் வகையிலும், ஊழியர்களிடையே திறமையைக் கூட்டும் வகையிலும் இந்த நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்துள்ளதாக மத்திய அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
மாதந்தோறும் அதிகாரிகளின் செயல்பாடு குறித்த அறிக்கையை மத்திய அரசு கேட்டுப் பெறுகிறது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.