இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் மறைவு கலையுலகுக்கு பேரிழப்பு: தலைவர்கள் இரங்கல்
சென்னை: இயக்குநர் சிகரத்தின் மறைவு கலையுலக்கு பேரிழப்பு என்று விஜயகாந்த், வைகோ, உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர். வளரும் இயக்குநர்களுக்கு முன்மாதிரியாய் விளங்கிய பாலச்சந்தரின் பெயரால் விருது அறிவிக்க வேண்டும் என்று சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
இயக்குநர் கே.பாலச்சந்தர் மறைவுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழகத்தலைவர் கீ.வீரமணி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்மாநிலக்கட்சித்தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்த் இரங்கல்
இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள் காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என்றும், அவர் கலையுலகிற்கு உணர்வோடு ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவு கூறத் தக்கது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கலையுலகத்தினற்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
வைகோ இரங்கல்
பாலசந்தர், பாரதியாரை போல் சமூக உணர்வுள்ள கருத்துக்களை படங்கள்மூலம் வெளிப்படுத்தினார் என ம.தி.மு.க., பொதுசெயலாளர் வைகோ தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
வீரமணி வருத்தம்
கே.பாலச்சந்தரின் திரைப்படங்களில் பலவற்றில் ஒரு புதுமை நோக்கு போக்கு இருக்கும். பல திரைப்படக் கலைஞர்களை உருவாக்கிய நாணயச் சாலை போன்றவர் இயக்குநர் கே.பாலச்சந்தர். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், கலை உலகத்தாருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கீ.வீரமணி கூறியுள்ளார்.
ஜி.கே. வாசன் அதிர்ச்சி
தமிழ்த் திரையுலகில் தன்னிகரில்லாத சாதனைகள் படைத்த இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தனது திரைப்படங்கள் மூலம் மனித வாழ்வின் பல்வேறு பரிணாமங்களை எடுத்துக் காட்டிய அவர், பல்வேறு திரை நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியவர். பத்மஸ்ரீ, தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளைப் பெற்ற அவர், தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர். அவரது மறைவு கலையுலகுக்குப் பேரிழப்பு என வாசன் தெரிவித்துள்ளார்.
சீமான் இரங்கல்
நாடகக் கலைஞராக கலையுலகில் அடியெடுத்து வைத்த அய்யா பாலசந்தர் அவர்கள் தமிழ்த் திரையுலகில் நிகழ்த்தாத புரட்சி இல்லை. சாதியமும் மதப்பிடிப்பும் பெரிதாக நிலவிய அந்த காலகட்டத்திலேயே யாரும் நினைத்துப் பார்க்க முடியாத புதுமைகளை நிகழ்த்திக்காட்டிய பெருமை அய்யா பாலசந்தர் அவர்களையே சேரும்.
தனது இறுதிக்காலம் வரை இளைய தலைமுறைக் கலைஞர்களுக்கும் மாற்று சிந்தனையோடு வந்தவர்களுக்கும் ஊக்கமளித்து உதவியது அய்யா அவர்களின் தனிச்சிறப்பு. தனக்குப் பிடித்த திரைப்படங்களைப் பாராட்டி, தனது கைப்படவே கடிதம் எழுதி சம்பந்தப்பட்டவர்களை ஊக்கப்படுத்தும் நற்குணம் கொண்டவர் அய்யா பாலசந்தர் அவர்கள். விவசாயம், சாதியம், தமிழிசை, கலப்பு திருமணம், தேசப்பற்று என சகலவிதமான விதைப்புகளையும் மிகுந்த தைரியத்துடன் தனது படங்களில் செய்துகாட்டியவர்.
கலையுலகில் மட்டுமல்லாது தனிப்பட்ட வாழ்விலும் மிகுந்த கண்ணியத்துடன் வாழ்ந்த அந்த பெருமகனின் இழப்பு தமிழ்கூறும் நல்லுலகின் பேரிழப்பு.
அய்யா அவர்களின் பெயரில் விருதுகளை அறிவித்து மத்திய மாநில அரசுகள் அந்த நிகரற்ற கலைஞரை கௌரவிக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைக்கிறது என்று சீமான் கூறியுள்ளார்.