தி.க., தி.மு.க.வை ஆதரிக்கும் காங், விடுதலை சிறுத்தைகள்.. சட்டசபை தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம்?
சென்னை: திராவிடர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடுகளை தொடர்ந்து ஆதரித்து வருவதால் மீண்டும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் இடம்பெறக் கூடும் என்று கூறப்படுகிறது.
2004, 2009 லோக்சபா தேர்தல்களில் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி அமைத்து மத்திய அமைச்சரவையிலும் அங்கம் வகித்தது. ஆனால் கடந்த 2014 தேர்தலில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் தி.மு.க.வை வேண்டுமென்றே சிக்க வைத்துவிட்டதாக குற்றம் சாட்டி கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியது.
தனித்தனியாக போட்டியிட்ட தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தற்போது சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுதான் இருக்கிறது. இத் தேர்தலில் பலமான அ.தி.மு.க.வை வீழ்த்த பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க தி.மு.க. வியூகம் வகுத்து வருகிறது.
தி.மு.க.- காங். கூட்டணி
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை மீண்டும் உருவாக்க முயற்சிகள் நடக்கிறது. காங்கிரஸும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைவதை விரும்புகிறது.
காவிரியில்..
காவிரி பிரச்சனையில் தி.மு.க.வுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியும் போராட்டம் நடத்தியது. சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் ஒரே மேடையில் பேசினர்.
சட்டசபையில்..
இதேபோல் தமிழக சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதா வழிகாட்டுதல்படி தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்று குறிப்பிட்டார்.
இதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். கருணாநிதியின் அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்த இளங்கோவன், ஜெயலலிதா வழிகாட்டுதல்படி தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்று ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டது தவறு எனக் கூறினார்.
தி.க.வுக்கும் ஆதரவு
தற்போது மாட்டுக்கறி விவகாரம், தாலி அகற்றுதல் போன்ற தி.மு.க.வின் தாய் அமைப்பான திராவிடர் கழகத்தின் நிலைப்பாடுகளை முழு வீச்சோடு ஆதரித்து பேட்டியளித்துள்ளார் இளங்கோவன்.
மீண்டும் அணி?
இப்படி தி.க. மற்றும் தி.மு.க.வின் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் தி.மு.க.வும் காங்கிரஸும் மீண்டும் கூட்டணி அமைத்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
திருமா திடம்
மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியாரிய இயக்கங்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குமான உறவை எந்த தொலைக்காட்சியின் காழ்ப்புணர்ச்சியாலும் பிரித்துவிட முடியாது என்று மிக காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தந்தி பஞ்சாயத்து
தந்தி தொலைக்காட்சி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியை நேர்காணல் செய்தது. அப்போது திராவிடர் கழகத்துக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் மோதலை ஏற்படுத்தும் வகையில் பிழையான உள்நோக்கத்துடனான கேள்விகளை தந்தி தொலைக்காட்சியின் செய்தியாளர் முன்வைத்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.
நிபந்தனை விதித்த அதிமுக
இதனைத் தொடர்ந்துதான் நேற்று திருமாவளவன் விளக்க அறிக்கை கொடுத்தார். தி.மு.க.வுடன் அதிருப்தியில் இருந்தபடியே அண்ணா தி.மு.க. அணிக்கு போக சிறுத்தைகள் முயற்சித்தது. ஆனால் இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என்று அ.தி.மு.க. மேலிடம் உறுதியாக கூறிவிட்டது. இதனால் வேறுவழியின்றி தி.மு.க. அணிக்கே திரும்புவோம் என்கிற நிலையில் விடுதலை சிறுத்தைகள் வந்துவிட்டதாக தெரிகிறது.
பிரிக்கவே முடியாது..
இதன் ஒருபகுதியாகவே தந்தி டிவி பஞ்சாயத்தை முன்வைத்து திராவிடர் கழகம், பெரியாரிய இயக்கங்களுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்குமான உறவை பிரிக்கவே முடியாது என திருமா அறிவித்துள்ளார்.
தி.மு.க அணியில் காங்.வி.சி.?
இந்த அடிப்படையில் பார்த்தால் தி.மு.க. அணியில் மீண்டும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் இணையவே கூடும் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.