மாட்டிறைச்சி தடையை கண்டிக்காமல் அதிமுக ஒடுங்கியுள்ளது ஏன்.. திருநாவுக்கரசர் பளீர் கேள்வி
மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்திருப்பதை கண்டித்து, அதிமுக அரசு ஏன் வாய் திறக்காமல் ஒடுங்கியுள்ளது என்று திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்களே அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு தரப்பில் இருந்து எந்தவித அறிவிப்பும் வரவில்லை என்றாலும் மதுரை, சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் சமூக இயக்கத்தினரும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம்
இந்நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். இதில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொள்வார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் பாதிப்பு
மாடுகளை விற்கத் தடை என மத்தியில் ஆளும் பாஜக அரசு அறிவித்துள்ளது விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளது. மாடுகளை நம்பியே உள்ள விவசாயிகளை வஞ்சிகிறது பாஜக அரசு என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக ஒடுங்கியது ஏன்
இவ்வளவு மோசமான தடையை கொண்டு வந்துள்ள பாஜகவை ஏன் கண்டிக்காமல் அதிமுக ஒடுங்கியுள்ளது என்று திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார். மத்தியில் ஆளும் பாஜக சொல்வதுபடியே அதிமுக நடந்து கொள்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடரும் போராட்டங்கள்
மாட்டிறைச்சி தடைக்கு எதிராக திமுக ஜூம் 1ம் தேதி போராட்டம் நடத்துகிறது. அதற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சி நாளை போராட்டத்தை நடத்துகிறது. இதுதவிர பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும் போராட்டத்தை நடத்தி வருகின்றன.