'மெளனச்சாமியார்' உள்ளிட்டோர் மீது மே 2ம் தேதி ஊழல் பட்டியல்.. ஆளுநரிடம் வழங்குவோம்: ஈவிகேஎஸ்
நாகர்கோவில்: சென்னையில் மே மாதம் 2 ம் தேதி காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்று ஆளுனரை சந்தித்து தமிழக முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை புகார் மனுவாக அளிக்க உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்வதற்காக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று நாகர்கோவில் வந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
தமிழகத்தில் அனைத்து அமைச்சர்கள் மற்றும் "மௌன சாமியார்" பன்னீர்செல்வம் மீது ஊழல் புகார்கள் அதிக அளவில் உள்ளன. இவர்கள் மீதான ஊழல் புகார் அடங்கிய பட்டியலை வரும் மே மாதம் 2 ம் தேதி சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்று தமிழக ஆளுனரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.
கோகோ கோலாவிற்கு அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது ஏற்கனவே அனுமதி கொடுத்திருந்தால்தான் அதனை ரத்து செய்ய முடியும் ஆனால் தொழிற் துறை அமைச்சர் தோப்பூர் வெங்கடாசலம் சட்டசபையில் அனுமதியே கொடுக்கவில்லை என்று அறிவித்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.
தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரை செய்தியாளர்கள் சொன்ன உடன்தான் அப்படி ஓன்று இருக்கிறதா என்ற ஞாபகம் வருகிறது. அந்த கட்சியை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒரு கோமாளி அரசாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை பிடித்தால் அவர்களது படகுகளையும் மீனவர்களையும் விடுவிக்க காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் தற்போதைய பாஜக ஆட்சியில் படகுகளையும், மீனவர்களையும் விடுவிக்க முடியவில்லை.
அமைச்சர்கள் தினமும் கோவில்களில் உருண்டு புரள்வதும், பால்குடம் ஏந்தி ஜெயலலிதா முதல்வர் ஆக வேண்டும் என்று வெளிப்படையாக வழிபாடுகள் செய்வதாக கூறினாலும் அதிமுக வினரை அழைத்து கேட்டால் ஜெயலலிதா வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காகதான் இவற்றை எல்லாம் செய்வதாக கூறுகின்றனர். ஊழலில் கிடைத்த பணத்தை இப்படியெல்லாம் செலவு செய்கிறார்கள்.
மீன்பிடி தடைக்காலத்தில் புதுச்சேரி அரசு 5 ஆயிரம் ரூ மீனவர்களுக்கு வழங்குவது போல தமிழக அரசும் 5 ஆயிரம் ரூ வழங்கவேண்டும் என்றார் அவர்.