செக் மோசடி வழக்கில் காங்கிரஸ் மாஜி எம்.பி. அன்பரசு, மனைவிக்கு 2 வருட சிறை
சென்னை: செக் மோசடி வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி., அன்பரசு மற்றும் அவரது மனைவி கமலா ஆகியோருக்கு 2 வருட சிறை தண்டனை விதித்து சென்னை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
2006ம் ஆண்டு அன்பரசு உள்ளிட்ட 8 பேர் மீது சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா என்பவர் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்து வந்த சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட், அன்பரசிற்கு ரூ.35 லட்சம் அபராதம் விதித்தும், செக் தொகையை 9 சதவீதம் வட்டியுடன் வழங்கவும் உத்தரவிட்டதுடன், இந்த வழக்கு தொடர்பாக, அன்பரசு, அவரது மனைவி கமலா, ராஜீவ் காந்தி அறக்கட்டளை, மற்றும் தொழிலதிபர் மணி ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
மாஜிஸ்திரேட் கோதண்டராஜு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வழக்கு விவரம்:
அன்பரசு நடத்தி வந்த ராஜிவ்காந்தி அறக்கட்டளைக்கு, பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா, 2002ல் ரூ.35 லட்சம் கடன் கொடுத்துள்ளார். இந்த தொகை, வட்டியுடன் சேர்த்து, ரூ.1 கோடியாக உயர்ந்தபோது, ரூ.35 லட்சத்தை செக் போட்டு, டிரஸ்ட் மூலமாக போத்ராவுக்கு அளித்துள்ளனர்.
2006ல், இந்த செக் வங்கியில் போடப்பட்டபோது, பவுன்ஸ் ஆகிவிட்டது. இதுகுறித்து விளக்கம் கேட்டு போத்ரா தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், வணிக ஆணையத்திலும் புகார் தரப்பட்டது.