தேர்தல் வரும் பின்னே காங்கிரசில் உட்கட்சி பூசல் வெடிக்கும் முன்னே... விருப்ப மனுவிலும் குளறுபடி !
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கான விருப்ப மனு காங்கிரஸ் சார்பில் இன்று முதல் அக் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வழங்கப்பட்டது. விருப்ப மனு வழங்குவது குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்பட வில்லை என்று குற்றம்சாட்டி புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார் கராத்தே தியாகராஜன்.
பிரிக்க முடியாதது காங்கிரசும் உட்கட்சி பூசலும் என்று சொல்லும் அளவுக்கு காங்கிரசில் ஏதாவது ஒரு பிரச்சினை பூதாகரமாக வெடிப்பதும் பின்னர் அகில இந்திய தலைமை தலையிட்டு தீர்த்து வைப்பதும் வழக்கமான ஒன்று தான்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் சட்டபேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கான விருப்ப மனு அறிவிப்பு அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தென் சென்னை காங்கிரஸ் மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கராத்தே தியாகராஜன் கூறுகையில், "சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் முறையாக நடைபெறவில்லை. தேர்தலுக்கு முன்னதாக பணிக்குழுவை அமைக்கவில்லை. தேர்தல் விருப்ப மனு அறிவிப்பு காங்கிரஸ் தலைமை மூலம் வெளியிடப்படாமல் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா மூலம் வெளிவந்துள்ளது. இதனால் நாங்கள் விருப்ப மனுவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து பதலளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா, "சட்டமன்ற தேர்தல் விருப்ப மனு குறித்து நான் வெளியிட்ட அறிவிப்பு காங்கிரஸ் கட்சி செய்திக் குறிப்பில் இருந்து வெளி வந்துள்ளது. இன்று முதல் வரும் பிப்ரவரி 15 வரை காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களுக்கு விருப்ப மனு விநியோகம் நடக்கும் என்று முறையாக அறிவித்தோம் என்று விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அனைத்து கட்சிகளும் கூட்டணி தொடர்பான விஷயங்களில் மும்முரம் காட்டி வருகின்றனர். சில கட்சிகள் விருப்ப மனு, வேட்பாளர் நேர்காணல் என பரபரப்பாக இருக்கும் சூழலில் தேர்தல் வருவதற்கு முன்னதாகவே காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல்கள் வெடித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.