மனம் போனபடி நடந்து கொள்கிறார் ஜெ.... ஸ்டாலினை சந்தித்த பின் காங். கே.ஆர். ராமசாமி சாடல்
சென்னை: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் மனம் போன போக்கில் நடந்து கொள்கிறார் என்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர். ராமசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் இருந்து திமுக எல்எல்ஏக்கள் 79 பேர் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் ஆகிய கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர். ராமசாமி செய்தியாளர்களிடம், சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சபாநாயகர் அதனை ஏற்க மறுக்கிறார் என்று தெரிவித்தார்.
மேலும், இனி வரும் காலங்களில் பேரவை நடவடிக்கைகளில் எப்படி நடந்து கொள்வது என்று தினமும் கலந்து பேசி முடிவு எடுக்க உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
"சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி வரிசையில் யாருமே இல்லை. யாரைப் பார்த்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பேசுகிறார் என்றே தெரியவில்லை. யாரிடம் கேள்வி கேட்கிறார் என்றும் தெரியவில்லை. அவர் மனம் போன போக்கில் நடந்து கொள்கிறார்" என்றும் ராமசாமி குற்றம்சாட்டினார்.