கருணாநிதி பிறந்தநாளுக்காக டெல்லியில் சோனியா காந்தி விருந்து.. கனிமொழி பங்கேற்பு
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதில் கனிமொழி எம்.பி. கலந்துகொள்கிறார்.
டெல்லி: கருணாநிதியின் 94-ம் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு நாளை சோனியா விருந்து கொடுக்க உள்ளார். இந்த விருந்து நிகழ்ச்சியில் கனிமொழி கலந்து கொள்கிறார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவதால் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்தத் தேர்தலில் ஆளும்கட்சியான பாஜக நிறுத்தும் வேட்பாளரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யாரை களம் இறக்கலாம் என்று ஆலோசனை நடத்த சோனியா நாளை டெல்லியில், எதிர்க் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
11 கட்சிகள் பங்கேற்பு
இந்தக் கூட்டத்தில் தி.மு.க., ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 11 கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
கனிமொழி பங்கேற்பு
மம்தா பானர்ஜி, லல்லு பிரசாத், சரத்பவார், முலாயம் சிங், மாயாவதி, உமர் அப்துல்லா, சீதாராம் யெச்சூரி, சரத்யாதவ் போன்ற முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சோனியா விருந்து
இதையொட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சோனியா விருந்து கொடுக்க உள்ளார். நாளை டெல்லியில் இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கருணாநிதி விழாவில் சோனியா பங்கேற்கவில்லை
சோனியாகாந்தி சென்னை வந்து கருணாநிதி பிறந்த நாள் விழாவில் பங்கேற்க இயலாத நிலையில் இருப்பதால் அவர் நாளையே இந்த விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.