காங்கிரஸ் 130வது ஆண்டு விழா... ராகுல் காந்தி "ஆப்சென்ட்"!
சென்னை: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 130வது நிறுவன தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னையிலும் சத்தியமூர்த்தி பவனில் கொடியேற்றி இதைக் கொண்டாடினர்.
டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். இதில் மூத்த தலைவர்களான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி, ஷீலா தீட்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆனால் துணைத் தலைவரான ராகுல் காந்தி வரவில்லை. அவர் வராததற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
1885ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதிதான் காங்கிரஸ் கட்சி உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அது வரலாறு காணாத பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தது. லோக்சபா தேர்தலில் மிகப் பெரிய தோல்வியையும் அது சந்தித்தது. சரியான தலைமை இல்லாமல் தடுமாறியும் வருகிறது.
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் நடந்த பல்வேறு மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் அது பெரும் அடி வாங்கியுள்ளது. இந்த ஆண்டில் அது மகாராஷ்டிரா, ஆந்திரா, ஹரியானா ஆகிய மாநிலங்களை அது இழந்துள்ளது. கூட்டணியாக ஆட்சியில் இருந்து வந்த ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீரிலும் அது தோல்வியைத் தழுவியது.
ஜம்மு காஷ்மீரில் அதன் கதை முழுவதுமாக முடிந்து விடவில்லை. அங்கு பாஜகவுக்கு எதிரான ஆட்சி அமைய காங்கிரஸ் உதவக் கூடிய நல்ல நிலையில்தான் உள்ளது. இது சற்று ஆறுதல் தரும் விஷயமாகும்.
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த சோனியா காந்தி, ஆட்சியமைக்கும் அளவுக்கு அங்கு எங்களுக்கு மக்கள் ஆதரவு தரவில்லை. எனவே மற்றவர்கள்தான் அங்கு ஆட்சியமைப்பார்கள் என்றார்.
சென்னையில்...
சென்னையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிறுவன நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்திய தேசிய காங்கிரஸ் கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். அதற்கு முன்னர் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, குமரி அனந்தன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் டாக்டர் கே. ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம். ஆரூண், விஜயதரணி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய் இளஞ்செழியன், மகிளா காங்கிரஸ் தலைவி சாயிலட்சுமி, மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கராத்தே தியாகராஜன், என். ரங்கபாஷ்யம் மற்றும் காங்கிரஸ் முன்னோடிகள், நிர்வாகிகள் ஆகியோர் பெருமளவில் பங்கெடுத்துக் கொண்டனர்.