ராகுல் மீதான தாக்குதல், கேஸ் மானியம் ரத்தை கண்டித்து காங். மறியல்.. திருநாவுக்கரசர் கைது
சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் மானிய ரத்துக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது அக்கட்சியின் தமிழக தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் கைது செய்யப்பட்டார்.
வரும் 2018-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி முதல் சமையல் எரிவாயுவுக்கு மத்திய அரசு அளித்து வரும் மானியம் ரத்துசெய்யப்படும் என்று கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது.
இந்த அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சி தலைமையிலான ஆர்ப்பாட்டத்தில் திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், யசோதா, குமரி அனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது திருநாவுக்கரசர் பேசுகையில், மோடிக்கு ராகுல்காந்தி சிம்ம சொப்பனமாக உள்ளார். ராகுல்காந்தி மீதான தாக்குதலுக்கு மோடி வருத்தம் தெரிவிக்கவில்லை. ராகுல்காந்தி மீது குஜராத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்துக்குரியது என்றார்.
ராகுல் காந்தி மீதான தாக்குதலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மறியலை கைவிடும்படி போலீஸார் கோரியும் கைவிடாததால் கட்சியினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து திருநாவுக்கரசர் உள்ளிட்ட கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.