சத்தியமூர்த்தி பவன் கலாட்டா... கட்சி நிர்வாகிகளை நீக்கிய திருநாவுக்கரசர்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனின் நடைபெற்ற மகளிர் அணியினர் சண்டைக்கு காரணமான இருவரை அக்கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தற்காலிகமாக நீக்கியுள்ளார்.
சென்னை: சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற சண்டைக்கு காரணமாக கூறப்பட்ட கௌரி கோபால் மற்றும் முகம்மது சையத் கியாஸ் உல்ஹக் ஆகிய இரண்டு பேரை காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தற்காலிகமாக நீக்கியுள்ளார்.
தமிழக மகளிர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜான்சி ராணி மற்றும் அகில இந்திய மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் ஹசீனா ஆகியோர் இடையே கடும் மோதல் மூண்டது.
இதில் ஜான்சிராணி கடுமையாக தாக்கப்பட்டார். தமிழக காங்கிரஸ் கட்சியில் பல கோஷ்டிகள் உள்ளன. மகளிர் காங்கிரஸ் அமைப்பிலும் பல கோஷ்டிகள் உருவாகி விட்ட நிலையில், அங்கும் சண்டைக்கு பஞ்சம் இல்லை.
தலையெடுத்த பிரச்சனை
கடந்த ஆண்டு மகளிர் காங்கிரஸ் அணி தலைவராக ஜான்சி ராணி பதவி ஏற்றார். கட்சியில் பொறுப்பேற்ற உடன் முன்னாள் எம்எல்ஏ நிலக்கோட்டை பொன்னம்மாளின் பேத்தி ஜான்சி ராணிக்கும் பல பிரச்சனைகள் கட்சிக்குள் உருவானது.
வாக்குவாதம்
குறிப்பாக ஜான்சி ராணியை பதவியில் இருந்து இறக்கிவிட்டு அந்த இடத்திற்கு நக்மாவின் ஆதரவாளர் ஹசீனாவை கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற்றன. இந்தப் பிரச்சனையில் சத்திய மூர்த்தி பவனுக்கு வந்த மகளிர் அணி நிர்வாகிகள் சிலர் ஜான்சிராணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மண்டை உடைப்பு
இதில் இரு அணிகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்றது. அப்போது கெட்ட வார்த்தைகளை சொல்லி இரு அணியினரும் திட்டிக் கொண்டனர். இந்தச் சண்டையில் ஜான்சி ராணிக்கு படுகாயம் அடைந்தார். பெண்களுக்கு இடையேயான மோதலில் ஆண்களும் புகுந்து அடாவடியில் ஈடுபட்டனர்.
நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் திருநாவுக்கரசர், பிரச்சினைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
தற்காலிக நீக்கம்
அதன் அடிப்படையில், இன்று சண்டைக்கு காரணமாக கூறப்பட்ட திருவள்ளூர் மாவட்ட மகிளா காங்கிரசின் முன்னாள் தலைவர் கௌரி மற்றும் முன்னாள் எம்எல்ஏவான முகம்மது சையத் ஆகியோர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
தொடர்பு கூடாது
கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட அவர்கள் இரண்டு பேரிடமும், காங்கிரஸ் கட்சிக்காரர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.