சோனியாவை இழிவுபடுத்திய ஹெச்.ராஜா கொடும்பாவி எரிப்பு- போலீசிலும் புகார்!!
சோனியா காந்தியை இழிவாக பேசிய பாஜகவின் ஹெச். ராஜாவின் கொடும்பாவியை எரித்த இளைஞர் காங்கிரஸ் கட்சியினர், அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை: சோனியா காந்தியை இழிவாக பேசிய பாஜகவின் ஹெச்.ராஜா கொடும்பாவியை எரித்து இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்த போது செய்தியாளர் ஒருவர் கென்யாவிற்கு நிதி தரும் இந்திய அரசு தமிழர்களுக்கு நிதி தர மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அவரை தேசதுரோகி என ஹெச்.ராஜா திட்டினார்.
மோடியை தான் ஊடகங்கள் தொடர்ந்து விமர்சித்து வருவதாகவும், காங்கிரஸ் 10 ஆண்டுகள் ஆட்சி செய்த போது சோனியா காந்தியை இதுபோன்ற விமர்சிக்கவில்லை என்று கூறினார்.
வெள்ளைத்தோல் கொண்ட இத்தாலி நாட்டை சேர்ந்த சோனியா காந்தியை பார்த்து ஊடகங்கள் பயந்தன, அவரை விமர்சிக்கவில்லை என்று கொச்சையாக பேசினார். ஒரு விவசாயி கூட 10 ஆண்டுகளாக டெல்லிக்கு செல்லவில்லை. இப்போது ஒரு இந்தியர் ஆளும் போது தமிழக விவசாயிகள் செல்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சோனியா காந்தியை இழிவாக பேசியதால், இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் ஹெச்.ராஜாவின் கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு எதிராக காவல்துறையில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.
உருவபொம்மை எரிப்பு
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விஜய் இளஞ்செழியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது ஹெச். ராஜாவுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள், ஹெச். ராஜாவின் கொடும்பாவியை தீவைத்து கொளுத்தினார்கள்.
கமிஷனர் அலுவலகத்தில் புகார்
செய்தியாளர்களிடம் பேசிய விஜய் இளஞ்செழியன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தரக் குறைவாக விமர்சித்த ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும். இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்க உள்ளோம். சோனியா காந்தியை ஹெச்.ராஜா தொடர்ந்து அவமதித்தால் அவருக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.
மகளிர் அமைப்பினர் போராட்டம்
தமிழக மகளிர் காங்கிரஸ் மாநில தலைவி ஜான்சி ராணி தலைமையில் பெண்கள் ஹெச்.ராஜாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எச்.ராஜாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தும் பா.ஜனதா தலைவர்களை கண்டிக்கிறோம். ஹெச்.ராஜா மன்னிப்பு கேட்கும்வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர் பின்னர் ஹெச். ராஜா கொடும்பாவியை தீவைத்து எரித்தனர்.
காவல்நிலையத்தில் புகார்
சோனியா காந்தியை இழிவுபடுத்தும் வகையில் பேசிய ஹெச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் நிலையத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். இதேபோல் ஹெச். ராஜாவுக்கு எதிராக பல இடங்களிலும் போராட்டம் வெடித்துள்ளது.