சிம்பு சந்தேகப்படும் அளவுக்கு சதி செய்வது யாரு?
என் படம் குறித்த தேதியில் வெளிவரக் கூடாது என்று சிலர் சதி செய்வதாக சிம்பு தெரிவித்துள்ளார். அந்த சிலர் யாராக இருக்கக் கூடும் என்று திரையுலகம் குழம்பி வருகிறது.
சிம்புவின் வாலு படம் கிட்டத்தட்ட நான்காண்டுகளில் பல பஞ்சாயத்துகளைக் கடந்து வெளியீட்டுக்குத் தயாரானது. ஜூலை 17-ம் தேதி படம் வெளியாவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
ஆனால் அதற்குள் இந்தப் படத்தை வெளியிட முதலில் உரிமை பெற்ற நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு ஜூலை 13 வரை படத்தை வெளியிடுவதை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் படம் வெளியாகுமா ஆகாதா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்த சிம்புவின் தந்தை டி ராஜேந்தர், தன் மகனுக்கு எதிராக சதி நடப்பதாக புகார் தெரிவித்தார். அதேநேரம் தன் பங்குக்கு சிம்புவும் ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார்.
அதில், "வாலு பட திரையரங்க விநியோக உரிமையை என் தந்தை பெற்றுள்ளதை பலரும் அறிவார்கள். அவர் ஒரு விஷயம் சொன்னால் சரியாக இருக்கும். காரணம் அவர் அனுபவம் அப்படி. நான் அவர் மகன் என்பதற்காக அல்ல.. நான் நடித்த படமாக இருந்தாலும், அது நன்றாக இருந்ததால் மட்டுமே அவர் உரிமை வாங்கினார்.
ஆனால் குறிப்பிட்ட அந்தத் தேதியில் என் படம் வெளியாகக் கூடாது என சதி செய்கிறார்கள். இப்போது நிலைமை என் கட்டுப்பாட்டை மீறிப் போய்விட்டது.
ஆனால் நான் தன்னம்பிக்கை மிக்கவன். அந்த தன்னம்பிக்கையும் ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அன்பும் இந்தப் படத்தை வெளியில் கொண்டு வரும்," என்றார்.
சரி... இந்த சதியைச் செய்வது யார்? அந்த 17-ம் தேதி வெளியாகும் படக் குழுவினரா? தெளிவாகச் சொல்லலாமே சிம்பு!