திறன் சார்ந்த பயிற்சிகளுக்காக தனி பல்கலைக் கழகம்.... மத்திய அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி
சென்னை: திறன் சார்ந்த பயிற்சிகள் அளிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் மருத்துவத் துறையில் திறன் சார்ந்த பயிற்சியை அளிக்கும் திட்டம் அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரதாப் ரூடி பேசியதாவது:
இந்தியாவில் பொறியியல் படித்த 50% பேரும், மேலாண்மை படிப்புகள் படித்த 70% பேரும் வேலை இல்லாமல் உள்ளனர். எனவே திறன் சார்ந்த பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
சீனாவில் 46%, ஆஸ்திரேலியாவில் 65% பேர், ஜெர்மனியில் 74% பேர், ஜப்பானில் 80% பேர், தென்கொரியாவில் 96% பேர் திறன் சார்ந்த பயிற்சிகளைப் பெற்றுள்ளனர்.
ஆனால் இந்தியாவில் வெறும் 2% பேர் மட்டுமே இத்தகைய பயிற்சிகளைப் பெற்றுள்ளனர். இந்தியாவில் 12 கோடி பேருக்கு திறன் சார்ந்த பயிற்சி தேவைப்படுகிறது. அதில் வெறும் 30% பேர் மட்டும் அதற்கான செலவை ஏற்கும் நிலையில் இருக்கின்றனர். எஞ்சியுள்ள 70% பேருக்குப் பயிற்சி அளிப்பதற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசுக்கு ரூ. 4.5 லட்சம் கோடி செலவு ஏற்படும்.
திறன் சார்ந்த பயிற்சிகளை மேலும் முன்னேற்றுவதற்கு மத்திய தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வந்த 12 ஆயிரம் ஐ.டி.ஐ. பயிற்சி நிறுவனங்கள் மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திறன் சார்ந்த பயிற்சிகளுக்கென்று ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கும் திட்டம் உள்ளது. இதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து திட்டமிட்டு வருகிறோம்.
அப்பல்லோ மருத்துவமனையின் சார்பில் 1 லட்சம் பேருக்கு மருத்துவத் துறையில் திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ராஜிவ் பிரதாப் ரூடி கூறினார்.