சென்னை - செங்கல்பட்டு சாலையில் வெள்ளம்: பேருந்துகள் மாற்றுப்பாதையில் இயக்கம்
சென்னை: கனமழை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. சென்னை - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை ஒருவழிப் போக்குவரத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதால், வாகனங்கள் அந்த சாலையில் மெதுவாக ஊர்ந்துசெல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதால் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, பூவிருந்தவல்லி வழியாக திருச்சிக்கு வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் தியாகராய நகர், புரசைவாக்கம், வேளச்சேரி, தாம்பரம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்யத் துவங்கியுள்ளது. ஏற்கனவே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இம்மழை மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.
|
முடங்கிய போக்குவரத்து
தாம்பரம் - சோமங்கலம், தாம்பரம் - வேளச்சேரி, சேலையூர் - அகரம்தென், சோழிங்கநல்லூர் - பெரும்பாக்கம் பள்ளிக்கரணை பகுதிகளில் ரோட்டுக்கு மேல் 4 அடிக்கு தண்ணீர் செல்வதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
|
வெள்ளத்தில் மிதக்கும் சாலைகள்
அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கம், ஐ.சி.எப். காலனி, அத்திப்பட்டு, திருவேற்காடு பகுதிகளும் வெள்ளத்தில் மிதப்பதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
சென்னை - செங்கல்பட்டு
சென்னை அருகே காட்டங்குளத்தூர் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால் திருச்சி செல்லும் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை - செங்கல்பட்டு ஒரு வழிப்பாதையாக்கப்பட்டது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் செங்குன்றம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் வெள்ளமென பெருக்கெடுத்துள்ளது.
|
போக்குவரத்து நெரிசல்
சென்னை செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை ஒருவழியாக மாற்றப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் தென்மாவட்டம் செல்லும் பேருந்துகள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாயினர்.
மாற்றுப்பாதையில் இயக்கம்
சென்னை புறநகரில் திருச்சி நெடுஞ்சாலையில் வெள்ள நீர் ஆறாக கரைபுரண்டு ஓடுவதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, பூவிருந்தவல்லி வழியாக திருச்சிக்கு வாகனங்கள் இயக்கப்படுகின்றன. திருச்சியில் இருந்து வரும் வாகனங்களும் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.