பி.ஹெச்.டி. படிப்பு சர்ச்சையில் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா!
நெல்லை: அதிமுக ராஜ்யசபா எம்.பி.யான சசிகலா புஷ்பாவின் பி.ஹெச்.டி. படிப்பு தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.
தூத்துக்குடி மேயராக இருந்த சசிகலா புஷ்பா பின்னர் ராஜ்யசபா எம்.பி.யானார். எம்.ஏ. முடித்துள்ள அவர் 2012-ம் ஆண்டு நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நேரடியாக பி.ஹெச்.டி. 3 ஆண்டில் சேர்ந்திருக்கிறார்.
பின் 2015 டிசம்பரில் தமது பி.ஹெச்.டி. ஆய்வறிக்கையை சசிகலா புஷ்பா சமர்ப்பித்துவிட்டதாகவும் அவருக்கு 'வைவா' நடத்தப்பட்டு முனைவர் பட்டம் வழங்க தகுதியானவர் எனவும் அறிவிக்கப்படதாம். சசிகலா புஷ்பா நாளை பிப்ரவரி 13-ந் தேதியன்று முனைவர் பட்டத்தை ஆளுநரிடம் இருந்து பெற இருக்கிறார்.
இந்நிலையில் அப்போது மேயர் மற்றும் தற்போது ராஜ்யசபா எம்.பி. என பிஸியாக இருக்கும் சசிகலா புஷ்பா எப்படி நேரடி வகுப்பில் கலந்து கொண்டிருக்க முடியும் என ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் பாஸ்கர் கூறுகையில், மொத்தம் 12 முறைதான் சசிகலா புஷ்பா பல்கலைக் கழகத்துக்கு சென்றிருக்கிறார். அப்படியான ஒருநபரின் ஆய்வறிக்கை தொடர்பாக யூசிஜி விசாரணை நடத்த வேண்டும் என்கிறார்.
ஆனால் பல்கலைக் கழக நிர்வாகமோ, பி.ஹெச்.டி. ஆய்வாளர்கள் தினமும் பல்கலைக் கழகம் வர வேண்டிய அவசியம் இல்லை.. அவர் ஆய்வுகளில் இருப்பதே வருகைக்கு சமம் என்கிறது.
ஆஹா...பூதம் கிளம்புதே..