2016 சட்டசபை தேர்தலில் பல்லாயிரம் கோடி ரூபாய் சர்ச்சையில் சிக்கிய சிறுதாவூர் பங்களா!
ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சிறுதாவூர் பங்களாவில்தான் பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டதாக கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் பெரும் சர்ச்சையே வெடித்தது.
சென்னை: 2016 சட்டசபை தேர்தலின் போது பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் பதுக்கப்பட்டதாக சர்ச்சையில் சிக்கியதுதான் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா.
ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டது. சர்ச்சைகளின் மைய புள்ளியாக சிறுதாவூர் பங்களா இருந்து வருவதால் தீ விபத்து குறித்து பல சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.
சட்டசபை தேர்தலின் போது மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் வைகோ. தமிழக அரசியலையே தம் பக்கம் திரும்பிப் பார்க்கும் வகையில் நாள்தோறும் அதிரடி குற்றச்சாட்டுகளை பேசிவந்தார்.
பல்லாயிரம் ரூபாய் கோடி
அந்த வகையில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் ரொக்கம் சிறுதாவூர் பங்களாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தமக்கு நம்பகமான தகவல் கிடைத்திருக்கிறது என பேசி பெரும் பரபரப்பை கிளப்பினார் வைகோ. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்தும் பார்த்தார் வைகோ.
வீடியோக்கள்...
தற்போது வருமானவரித்துறை சோதனையில் சிக்கியிருக்கும் சிட்லபாக்கம் ராஜேந்திரன் இதற்காகவே வைகோ மீது போலீசிலும் புகார் கொடுத்திருந்தார். சிறுதாவூர் பங்களாவில் லாரிகள் தார்பாய் போட்டு மூடப்பட்டிருந்ததாக வீடியோக்கள் வைரலாகவும் பரவின.
லஞ்சப் பணம்
10 லாரிகளில் கொண்டுவரப்பட்டு சிறுதாவூர் பங்களாவில் பதுக்கி வைக்கப்பட்ட பணம்தான் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டதாகவும் பேச்சு எழுந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் கூட சிறுதாவூர் பங்களாவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆவணங்கள் எரிப்பு?
இதுவும் சர்ச்சையாகிப் போனது. அதேபோல் சிறுதாவூர் பங்களா அமைந்துள்ள நிலமே தலித்துகளுக்கானது என்ற சர்ச்சையும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் மிக முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் என்றே கூறப்படுகிறது.