வெப்பசலனம்.. தமிழகத்துக்கு அடுத்த 24 மணிநேரத்தில் மழை
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை காலம் தொடங்கியுள்ளதை அடுத்து, கடந்த சில நாட்களாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து, வங்கக் கடலில் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டியுள்ள தெற்கு ஒடிசா கடல்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக ஏற்பட்டுள்ள வெப்பச்சலனத்தால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை கடந்த சில நாள்களாக வெப்பம் தணிந்து வானம் மேகமூட்டமாக இருக்கிறது. எனினும் மழையை காணவில்லை. வெப்பசலனத்தால் சென்னைக்கு மழை கிடைக்குமா என்று எதிர்பார்த்து வருகின்றனர்.